கறுப்புப் பணத்தில் பங்கு கொடுங்கள்! - பிரதமர் மோடிக்கு விவசாயி கடிதம்

கறுப்புப் பணத்தில் எனக்கு பங்கு கொடுங்கள் என வங்கிக் கணக்கு விபரத்துடன் பிரதமர் மோடிக்கு கேரளாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கடிதம் எழுதி உள்ளார்.

கேரளா மாநிலம் வய நாட்டைச் சேர்ந்த விவசாயி சாது என்பவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “வெளிநாட்டில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணம் இந்தியாவிற்கு கொண்டு வரப்படும், ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கிக் கணக்கிலும் ரூ.15லட்சம் டெபாசிட் செய்யப் படும் என கூறியிருந்தீர்கள்.

அதன்படி கறுப்புப் பணத்தில் எனக்கான ஷேரை கொடுங்கள். மூன்று வருடங்கள் ஆட்சியில் இருந்து உள்ளீர்கள், ஆனால் நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. விவசாய விளைப்பொருட் களின் விலை குறைவு, நுகர் பொருட்களின் விலை உயர்வு, பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு சாதாரண மனிதனுக்கு பெரும் துயரமாக அமைந்துள்ளது.

எனவே உங்களுடைய வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக இப்போதைக்கு குறைந்தபட்சம் ரூ. 5 லட்சத்தை என்னுடைய கணக்கில் டெபாசிட் செய்யுங்கள்” என தெரிவித்துள்ளார். மேலும், விவசாயி சாது தன்னுடைய வங்கிக் கணக்கின் விபரங்களையும் பிரதமர் மோடிக்கு குறிப்பிட்டு அனுப்பியுள்ளார்.

More News >>