உலகம் முழுவதும் கொரோனாவால் 2.28 லட்சம் பேர் சாவு.. அமெரிக்காவில் 61 ஆயிரம் பலி

உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 32 லட்சத்து 20,225 ஆக அதிகரித்துள்ளது. இந்நோய்க்கு 2.28 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில்தான் அதிகபட்சமாக 61 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவியிருக்கிறது. உலகம் முழுவதும் தற்போது 32 லட்சத்து 20,225 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. இதில் 10 லட்சத்து 357 பேர் குணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 28,223 பேர் பலியாகி விட்டனர். தற்போது 19 லட்சத்து 91651 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீனாவில் 84 ஆயிரம் பேருக்கு பரவியிருந்த நிலையில், அந்நாடு நோய் பரவுவதை கட்டுப்படுத்தி விட்டது. அதே சமயம், அமெரிக்காவில் இந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவி, அதிகமானோரை காவு வாங்கி விட்டது. அந்நாட்டில் 10 லட்சத்து 64,533 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 61,668 பேர் உயிரிழந்து விட்டனர். அடுத்தபடியாக, இத்தாலியில் 2 லட்சத்து 359 பேருக்கு பரவிய நிலையில் 27,682 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் ஒரு லட்சத்து 65,221 பேருக்கு நோய் பரவிய நிலையில், 26,097 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்சில் ஒரு லட்சத்து 66,420 பேருக்கு கொரோனா பரவிய நிலையில், 24,087 பேர் பலியாகியுள்ளனர். ஸ்பெயினில் 2 லட்சத்து 36,899 பேருக்கு நோய் பரவிய நிலையில், 24,275 பேர் பலியாகியிருக்கின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை 31,787 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர்.

More News >>