மகாராஷ்டிராவில் மே 21ல் மேலவை இடைத்தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே போட்டியிட வசதியாக வரும் 21ம் தேதியன்று சட்டமேலவை உறுப்பினர்(எம்.எல்.சி) இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. 9 காலியிடங்களுக்குத் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.தேர்தலில் போட்டியிடாமல் பதவியேற்ற முதல்வர் அல்லது அமைச்சர்கள் பதவியேற்ற 6 மாதத்திற்குள் சட்டசபை உறுப்பினராகவோ, சட்டமேலவை உறுப்பினராகவோ பொறுப்பேற்க வேண்டும். அல்லது பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும்.

இதன்படி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, மே 27ம் தேதிக்குள் எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி ஆகத் தேர்வாக வேண்டும். தற்போது கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே, சட்டமேலவைக்கு நியமன உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை நியமித்து மாநில அமைச்சரவை முடிவு செய்தது. இதை கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு அனுப்பியது. ஆனால், கவர்னர் அதற்கு அனுமதி அளிக்காமல் 2 நாட்களாகக் கிடப்பில் போட்டிருந்தார்.

இது பற்றி, பிரதமர் மோடியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் உத்தவ் தாக்கரே பேசினார். அவர் கவர்னரிடம் விளக்கம் கேட்டு முடிவெடுப்பதாகக் கூறியிருந்தார். இதன்பின்னர், கவர்னர் கோஷ்யாரி, தேர்தல் ஆணையத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பலவும் தளர்த்தப்பட்டுள்ளன. எனவே, மகாராஷ்டிராவில் காலியாக உள்ள 9 சட்டமேலவை உறுப்பினர்(எம்.எல்.சி) இடங்களுக்குத் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும். அதன்மூலம், சட்டசபை அல்லது சட்டமேலவைக்கு உறுப்பினராகும் சட்டப் பிரச்சனைக்கு முடிவு ஏற்படும் என்று கூறியிருக்கிறார்.

கவர்னரின் பரிந்துரையைப் பரிசீலித்த இந்தியத் தேர்தல் ஆணையம், மகாராஷ்டிராவில் காலியாக உள்ள 9 சட்டமேலவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலை அறிவித்தது. இதன்படி, வரும் 21ம் தேதியன்று தேர்தல் நடத்தப்பட்டு, அன்றே வாக்குகள் எண்ணப்படும். இதன்மூலம், உத்தவ் தாக்கரே சட்டமேலவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி விட்டது.

More News >>