கோயம்பேட்டில் இருந்து 6 மாவட்டங்களுக்கு பரவிய கொரோனா..

சென்னையில் கோயம்பேடு மார்க்கெட், கொரோனா பரவும் மையமாக மாறியிருப்பது தெரிய வந்துள்ளது. இங்கிருந்து சென்ற வியாபாரிகள், பொது மக்கள் மூலம் 6 மாவட்டங்களுக்கு கொரோனா பரவியிருக்கிறது.தமிழகத்தில் தினமும் நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. குறிப்பாக, கடந்த 25ம் தேதிக்கு பிறகுதான் அதிகமான பரவல் காணப்படுகிறது. காரணம், தமிழக அரசின் குழப்பமான ஊரடங்கிற்குள் ஊரடங்கு அறிவிப்பால், கடந்த 25ம் தேதி கோயம்பேடு மார்க்கெட்டில் 50 ஆயிரம் பேர் வரை குவிந்தனர். இதனால் கொரோனா பரவல் அதிகமாகும் என்று மறுநாளே பத்திரிகைகளில் செய்திகள் வந்தன.

அது தற்போது உண்மையாகி உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சரக்கு வாகனங்களில் வெளி மாவட்டங்களுக்கு சென்ற வியாபாரிகள், பொது மக்கள் மூலம் கொரோனா பரவியது கண்டறியப்பட்டிருக்கிறது. சென்னையில் 52 பேர், அரியலூர் 22, கடலூர் 17, காஞ்சிபுரம் 7, விழுப்புரம் 20, திருவள்ளூர் 1 என்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கடலூரில் முதலில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. நேற்று பண்ருட்டியில் ஒரு சிறுமி உள்பட மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறதி செய்யப்பட்டது. இதனால், அம்மாவட்டத்தில் 700 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதே போல், விழுப்புரம் மாவட்டத்தில் 11 கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். காஞ்சி மாவட்டத்தில் உத்திரமேரூரில் 7 வியாபாரிகள், திருவள்ளூரில் ஒரு வியாபாரி என்று கோயம்பேட்டில் இருந்து திரும்பியவர்கள் மூலமாக கொரோனா பாதித்திருக்கிறது.

More News >>