ரூ,500 கோடி முடக்கம்: சினிமா பணிகள் தொடங்க அனுமதிக்க வேண்டும்.. அரசுக்கு திரையுலகினர் முக்கிய கடிதம்..

சினிமாவில் நின்றுபோயிருக்கும் பணிகளைத் தொடங்க அனுமதி கேட்டு செய்தி தகவல் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜுக்குத் திரைப்படத் துறையினர் கடிதம் அனுப்பி உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் ஊரடங்கு சட்டம் அமலுக்கு வரும் முன்பே, தமிழ்த் திரைப்படத் துறை ஷூட்டிங் மற்றும் இதர போஸ்ட்-புரொடக்ஷன் வேலைகளை 16.3.2020 முதல் அமல்படுத்தி தற்போது 50 நாட்களுக்கு மேலாகத் திரைப்படத் துறை சம்பந்தப்பட்ட எந்த வேலைகளும் நடக்கவில்லை. 50 படங்களுக்கு மேல் இதனால் தடைப்பட்டு, ஏறக்குறைய 500 கோடி ரூபாய் முதலீடு முடங்கியுள்ளது. 50-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம் இதனால் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

சென்னை நகரம் சிவப்பு மண்டலமாக இன்னும் இருப்பதால், 50 முதல் 100 பேர் செயல்படும் ஷூட்டிங்/படப்பிடிப்பு செய்வதற்கு அனுமதி கொடுக்க முடியா விட்டாலும், குறைந்த பட்சம் படப்பிடிப்பு இல்லாத பணிகளான போஸ்ட்-புரொடக்சன் பணிகளுக்கு அனுமதி வழங்கினால், ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்து இந்த பணிகளுக்காக தற்போது 50 நாட்களாகக் காத்திருக்கும் தயாரிப்பாளர்கள் அவைகளை முடித்து, படங்களைத் தயார் செய்ய முடியும். தற்போது 11 தொழிற்துறைகளுக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கியிருப்பதைப் போன்று, திரைப்படத்துறைக்கும் போஸ்ட்-புரொடக்சன் பணிகள் செய்வதற்கு, ஏற்கனவே தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தங்களிடம் கேட்டுக்கொண்ட படி, நிபந்தனைகளோடு அனுமதி வழங்கு மாறு கேட்டுக் கொள்கிறோம் இதன் மூலம், அந்த பணிகளில் உள்ள தொழிலாளர்களுக்கும் வேலை கிடைக்கும். கேரளா அரசாங்கமும் இந்த பணிகளுக்கு நேற்று முதல் அனுமதி அளித்துள்ளதை தங்களின் பார்வைக்குச் சமர்ப்பிக்கிறோம்.

தங்களின் அனுமதியை கோரும் போஸ்ட்-புரொடக்சன் பணிகள்:படத்தொகுப்பு (Editing) - அதிக பட்சம் முதல் 4 பேர் 5 பணியாற்றும் அலுவலகம்.ஒலிச்சேர்க்கை (Dubbing) - அதிக பட்சம் 4 முதல் 5 பேர் பணியாற்றும் அலுவலகம்.கம்ப்யூட்டர் மற்றும் விஷுவல் கிராபிக்ஸ் (VFX/CGI) - 10 முதல் 15 பேர் பணியாற்றும் அலுவலகம்.டி. ஐ. (DI) எனப்படும் நிற கிரேடிங் - அதிக பட்சம் 4 முதல் 5 பேர் பணியாற்றும் அலுவலகம்.பின்னணி இசை (Re-Recording) - அதிக பட்சம் 5 பேர் பணியாற்றும் இடம்.ஒலிக் கலவை (Sound Design/Mixing) - அதிக பட்சம் 4 முதல் 5 பேர் பணியாற்றும் அலுவலகம்.

மேற்கூறிய போஸ்ட்-புரொடக்சன் பணிகளை நாங்கள் சமூக இடைவெளியுடனும், முகக்கவசம் மற்றும் சானிடைஸிர் உபயோகித்தும், மத்திய மாநில அரசுகள் விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் பின்பற்றி சுகாதாரமான முறையில் செய்வோம் என்று தயாரிப்பாளர்களாகிய நாங்கள் உறுதி கூறுகிறோம்.இவ்வாறு கடிதத்தில் கூறி உள்ளனர்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள்.இயக்குனர் பாரதிராஜா, கலைப்புலி எஸ் தாணு, டி.ஜி.தியாகராஜன், கேஆர், கே. முரளிதரன், டி. சிவா, கே.எஸ். ஸ்ரீனிவாசன், பி.எல். தேனப்பன், கதிரேசன், கமீலா நாசர், கே.. ராஜன், கே.ஈ. ஞானவேல் ராஜா, எச். முரளி, கே. விஜயகுமார், சித்ரா லக்ஷ்மணன், எஸ்.எஸ். துரைராஜ், பெப்ஸி சிவா, ஒய்நாட் ஸ்டுடியோ. சஷிகாந்த், ஜி. தனஞ்செயன், எஸ் ஆர். பிரபு, ராஜசேகர் பாண்டியன், பி. மதன், ஜேஎஸ்கே. சதீஷ்குமார், சி.வி. குமார், விஷ்ணு விஷால், சுதன் சுந்தரம், சுரேஷ் காமாட்சி, இயக்குனர் மனோபாலா, எம். திருமலை, டில்லி பாபு, எஸ். நந்தகோபால், எம்.மகேஷ், ஆர்.கே.சுரேஷ், உதயா, வினோத் குமார், பி.எஸ்.ரகுநாதன், லிப்ரா ரவீந்தரன், பி.ரங்கநாதன், எம்.எஸ். முருகராஜ், டாக்டர். பிரபு திலக், கே.எஸ் .சிவராமன், நிதின் சத்யா, ராதாரவி, பஞ்சு சுப்பு, இயக்குனர் மனோஜ் குமார், மதுரை செல்வம், பஞ்ச் பரத், கின்னஸ் பாபு கணேஷ், மற்றும் பி.ஜி. முத்தையா ஆகியோர் இணைந்து இந்த கடிதத்தை அனுப்பி உள்ளனர்.படப்பிடிப்பு பணிகளைப் பொறுத்தவரை கொரோனா ஊரடங்கு தடை முடிந்த பிறகு தொடங்கும் என்று தெரிகிறது.

அதேபோல் தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பிலும் கொரோனா ஊரடங்கு தடையால் திரையுலகில் நிறுத்தப்பட்டிருக்கும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்க அனுமதி கேட்டு பெப்சி தலைவர் ஆ.கே.செல்வமணி அரசுக்குக் கடிதம் எழுதி உள்ளார்.

More News >>