நாடாளுமன்றப் பொதுக் கணக்கு குழு தலைவராக ஆதிர்ரஞ்சன்

நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு தலைவராக ஆதிர்ரஞ்சன் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். 19 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களைக் கொண்டு பல்வேறு குழுக்கள் அமைக்கப்படும். இதில், பொதுக் கணக்கு குழு என்பது மிகவும் முக்கியம்வாய்ந்த குழுவாகும். இந்த குழுவினர் நாடு முழுவதும் உள்ள அரசு துறைகள், நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிப்பார்கள். இதில், அரசு நிர்வாகத்தில் நடைபெறும் முறைகேடுகள், தவறுகள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வரும்.

ஜனநாயக முறைப்படி இந்த குழுவுக்கு பெரும்பாலும் முக்கிய எதிர்க்கட்சியைச் சேர்ந்த சீனியர் உறுப்பினர் ஒருவரே தலைவராக இருப்பார்கள். இந்த வகையில் தற்போது மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.மே 1ம் தேதி முதல் 2021ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி வரையான காலத்திற்கு புதிய குழுவை நியமித்து சபாநாயகர் ஓம்பிர்லா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, பொதுக் கணக்கு குழுத் தலைவராக ஆதிர்ரஞ்சன் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

உறுப்பினர்களாக டி.ஆர்.பாலு, சுபாஷ் சந்திரபகேனா, சுதிர்குப்தா, தர்சனவிக்ரம் சர்தோஷ், பத்ருஹரிமாதேப், அஜய்மிஸ்ரா, ஜகதாபாம்பா பால், விஷ்ணுதயாள் ராம், ராகுல்ரமேஷ் ஷேவாலே, ராஜிவ்ரஞ்சன்சிங், சத்யபால்சிங், ஜெயந்த்சின்கா, பாபாசவுரி வல்லபனேனி, ராம்கோபால் யாதவ் ஆகிய லோக்சபா எம்.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே போல், ராஜ்யசபா உறுப்பினர்கள் ராஜிவ்சந்திரசேகர், நரேஷ்குஜ்ரால், சி.எம்.ரமேஷ், சுகந்துசேகர் ராய், பூபேந்தர்யாதவ் ஆகியோரும் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

More News >>