டாஸ்மாக் கடை திறப்புக்கு தங்கர் பச்சான் எதிர்ப்பு.. மக்கள் மீது அரசு பழி போடுவதா?

கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளைத் திறந்திருக்கிறது. இதற்குப் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. பிரபல திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில் மதுக் கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.அவர் கூறியிருப்பதாவது: விடிய விடிய உறக்கத்தை இழந்து அமைதியற்ற மனநிலையில்தான் இதை எழுத அமர்கிறேன். தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை அறிவிப்பின் போது எதிர்கொள்ளும் பரபரப்பான பதட்டமான மனநிலையில் தான் ஊடகச் செய்திகளைப் பார்க்கிறேன்.

உலக நாடுகளும்,உலக சுகாதார நிறுவனமும், மருத்துவத்துறை வல்லுநர்களும் கூட கோவிட் 19 தொற்று நோயை கட்டுப்படுத்துவது குறித்து நமது அரசைப் பாராட்டி வரவேற்றார்கள். இந்நிலையில்தான் கோயம்பேடு காய், கனி வளாகம் தொற்று பரப்பும் மையமாக மாற்றம் கண்டு அனைவரும் அதிர்ந்து கிடக்கின்றோம். மதுக்கடைகளைத் திறக்கிறார்கள் எனும் செய்தி வெளியானபோது பதற்றம் மேலும் அதிகமானது. இப்போது நீதிமன்றம் கட்டுப்பாடு நிபந்தனைகளை விதித்துக் கடைதிறக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் மீறப் படும்போது மீதமிருக்குப்பவர்களுக்கும் மதுக்கடைகள் கிருமியைக் கொண்டு சேர்த்துவிடுமே எனும் கவலை அனைவரையும் சோர்வடையச் செய்திருக்கிறது.

இதிலிருந்து மீண்டு விடலாம் என 43 நாட்கள் குடிக்காமல்தான் மக்கள் இருந்தார்கள். ஆனால் அரசாங்கத்தால் தான் மதுக்கடை திறக்காமல் இருக்க முடியவில்லை. எல்லையில் கடை திறந்து விட்டார்கள் எனக் காரணம் கூறி பழியை மக்களிடத்தில் போடுகிறது. இன்னும் மூன்று மாதங்கள் மதுக்கடைகளை மூடி வைத்திருந்தால் குடியை மறந்து வருமானம் முற்றிலுமாக நின்றுவிடும் என்று நினைத்து இப்போது திறக்கிறார்களோ எனும் எண்ணம் எழுகிறது. நான் சிறுவனாக இருந்தபோது அரசாங்கத்திற்கு தெரியாமல் சாராயம் காய்ச்சி விற்பவர்களை கைகளைக்கட்டி தலையில் குடத்தை வைத்து வீதி வீதியாக அடித்து இழுத்துக் கொண்டு போவதைப் பல முறை பார்த்திருக்கிறேன்.

அதைப் போல் அதை வாங்கி குடிப்பவர்களுக்கும் அடி உதை சிறைத்தண்டனை எல்லாம் உண்டு. ஆனால் இந்த 40 ஆண்டுகளுக்குள் சாராயம் விற்கின்ற வேலையை அரசாங்கமே செய்வதால் குடிப்பழக்கம் இல்லாதவர்கள் எல்லாம் குடிக்கத் தொடங்கி அடிமையாகி அலைகிறார்கள். மக்களைக் காக்க வேண்டியவர்கள் இந்த பேரழிவு காலத்தில்கூட இப்படிச் செய்யலாமா எனக்கேட்டால் ஆட்சி நடத்தப் பணம் இல்லை; அதற்காகத் தான் மதுக்கடைகளைத் திறக்கிறோம் எனச் சொல்வது எவ்வளவு பெரிய கேடு விளைவிக்கும் இவ்வாறு தங்கர்பச்சான் கூறி உள்ளார்.

More News >>