சென்னையில் கொரோனா நோயாளிகள் 3 பேர் பலி.. உயிரிழப்பு 40 ஆக அதிகரிப்பு..

சென்னையில் இன்று(மே8) கொரோனோ நோயாளிகள் மூன்று பேர் இறந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 40 ஆக அதிகரித்தது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாகத் தினமும் 400, 500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் நேற்று(மே 7) மட்டும் 580 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5409 ஆக உயர்ந்தது. நேற்று 2 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 37 ஆக அதிகரித்திருந்தது.

சென்னையில் நேற்று மட்டும் புதிதாக 316 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சென்னையில் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 2644 ஆனது. இதில் 25க்கும் மேற்பட்ட குழந்தைகளும் அடங்குவார்கள்.இந்நிலையில், சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாம்பரத்தைச் சேர்ந்த முதியவர் இன்று காலை உயிரிழந்தார். அதே போல், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோயம்பேடு காய்கறி வியாபாரி ஒருவரும், சூளைமேட்டைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவரும் பலியாகினர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா பலி 40 ஆக உயர்ந்தது.

More News >>