பார், பப், கிளப்களில் மது விற்பனைக்குக் கர்நாடக அரசு அனுமதி..

கர்நாடகாவில் கிளப்களிலும் மதுபான பார்களிலும் மது விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஏப்.20ம் தேதி வரையும், பின் மே 3ம் தேதி வரையும் தற்போது மே 17ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சில வர்த்தகங்களுக்குக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, மதுபானக் கடைகள் திறக்க அனுமதி தரப்பட்டது.

இதையடுத்து, டெல்லி, சட்டீஸ்கர், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் உடனடியாக மதுக் கடைகள் திறக்கப்பட்டன. 45 நாட்களுக்குப் பிறகு மதுக் கடைகள் திறக்கப்பட்டதால், அனைத்து கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளி பின்பற்றப்படாமலேயே குடி மகன்கள், சண்டை போட்டு சரக்குகளை வாங்கிச் சென்றனர். கர்நாடகாவில் மதுக்கடைகள் திறக்கப்பட்டாலும் கிளப், பார், பப் போன்றவை திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், கர்நாடக பாஜக அரசு இன்று ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, கிளப்களிலும், மதுபான பார் மற்றும் பப்களிலும் தேங்கியுள்ள மதுபானங்களை எம்.ஆர்.பி விலைக்கு விற்கலாம் என்றும் பார் கட்டணங்கள் எதுவும் வசூலிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது. மே 17ம் தேதி ஊரடங்கு முடியும் வரை இந்த உத்தரவு பொருந்தும் என்றும் அறிவித்தது.

மதுபாட்டில்களை விற்க அனுமதித்தாலும் பார் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிட்டது பார் உரிமையாளர்களுக்குக் கவலையைத் தந்துள்ளது. பார் உரிமையாளர் வெங்கடேஷ் பாபு, ஏ.என்.ஐ.க்கு அளித்த பேட்டியில், நீண்ட நாட்களாக பார்களையும், கிளப்களையும் மூடியிருந்ததால் ஏற்கனவே நஷ்டம் அடைந்துள்ளோம். தற்போது எம்.ஆர்.பி விலைக்கே விற்கச் சொல்லியிருப்பது மேலும் நஷ்டத்தையே தரும். ஆனாலும், இருப்பில் உள்ள சரக்குகளை விற்று வருகிறோம் என்றார்.

கர்நாடகாவில் தற்போது கிளப்புக்கு போனால் கூட எம்.ஆர்.பி. விலைக்குச் சரக்கு கிடைக்கிறது. தமிழ்நாட்டு குடிமகன்களுக்கு என்ன சாபமோ... சாக்கடை டாஸ்மாக் பாரில் கூட அநியாய விலைக்குச் சரக்கு அடித்து வந்தார்கள். இப்போது சாபத்திலும் சாபம்... மொத்தமாகக் கடைகளை மூடி விட்டார்கள். ஆனால், பல இடங்களில் டாஸ்மாக் ஊழியர்களும், போலீசாரும் கூட்டு வைத்து, 150 ரூபாய் ஹனிபீ பிராந்தியை ரூ.900க்கு விற்றுச் சம்பாதிக்கிறார்கள். குடிகார தமிழனும் பாவம்தான்...

More News >>