சம்பளம் வாங்காமல் நடிக்க முடிவு.. வில்லன் நடிகர் தகவல்..

பல்வேறு படங்களில் வில்லன் குணசித்தர வேடங்களில் நடித்திருப்பவர் அருள்தாஸ். இவர் ஒளிப்பதிவாளரும் ஆவார்.அருள்தாஸ் கூறியதாவது:மதுரையிலிருந்து சினிமா கனவுகளோடு வந்த நான், மீடியாவில் தற்காலிகமாக வேலை பார்த்தேன். அதனைத் தொடர்ந்து சினிமாவில் உதவி கேமரா மேன், அதன் அடுத்த கட்டமாக கேமரா மேன் பிறகு நடிகன் என்று படிப்படியாக உழைத்து, வளர்ந்து இன்று எங்குச் சென்றாலும் ஒரு நடிகனாக அடையாளம் தெரிகிற அளவுக்கு வந்திருக்கிறேன்.

முதன்முதலாக 'நான் மகான் அல்ல' படத்தில் தொடங்கி இப்போது வரை நடிகனாக பிசியாக இருக்கிறேன். அதற்குத் தயாரிப்பு நிர்வாகி தொடங்கி இயக்குனர்கள் வரை உள்ளவர்கள் என்றாலும், எனக்குச் சம்பளம் கொடுத்தது தயாரிப்பாளர்கள் எனும் முதலாளிகள் தான். இன்று நான் வாழும் வாழ்க்கை அவர்கள் கொடுத்தது. அவர்களுக்கு எனது நன்றி.

தற்போது உலகம் முழுக்க 'கோவிட்-19' என்ற கொடிய வைரஸ் பரவலால் நமது திரைத்துறையில் பல தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை இந்த கொரோனா வைரஸ் கேள்விக் குறியாக்கி விட்டது. ஆனாலும் நம் திரைத்துறையிலுள்ள ஃபெப்சி உள்ளிட்ட அனைத்து சங்கங்களும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட உச்ச நட்சத்திரம் தொடங்கிப் பல நல்ல உள்ளம் படைத்த திரைத்துறை நண்பர்களும் இயன்றவரை அனைவருக்கும் பல உதவிகளைச் செய்து வருகின்றனர். நானும் என்னைச் சுற்றி இருக்கும் திரைத்துறை நண்பர்கள் மற்றும் முகம் தெரியாத பலருக்கும் என்னால் இயன்றவரை உதவிகள் செய்து கொண்டுதான் இருக்கிறேன்.

இந்தச் சூழ்நிலையில் ஏற்பட்ட பொருளாதார சரிவுகளின் காரணமாக வருகிற சில மாதங்களுக்கு சினிமா எடுப்பதும் அதை வெளியிடுவதும் தயாரிப்பாளர்களுக்கு மிகுந்த சிரமமான காரியமாக இருக்கும். அதை மனதில் கொண்டு தயாரிப்பாளர்கள் நலன் கருதி சில நடிகர்களும், இயக்குநர்களும் அவர்களது சம்பளத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தைக் குறைத்துக் கொள்வதாகக் கூறியது உண்மையிலேயே இந்த நேரத்தில் பாராட்டத்தக்கது. அதேபோல என் வாழ்வை மேம்படுத்திய தயாரிப்பாளர்களுக்கு என்னால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி ஒலித்துக் கொண்டே இருந்தது. அதன் காரணமாக இந்த வருடம் 2020 டிசம்பர் மாதம் வரை நான் புதிதாக நடிக்கும் எல்லாப் படங்களுக்குச் சம்பளம் எதுவும் வாங்காமல் என் உழைப்பை முழுமையாக என் முதலாளிகளுக்கும் என் இயக்குனர் சகோதரர்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன்.

நான் பலகோடிகள் சம்பாதிக்கும் நடிகனில்லை என்றாலும், எனக்கும் தேவைகள் இருக்கிறது. ஆனாலும், அதை என்னிடம் உள்ள பொருளாதாரத்தை வைத்தும் மேலும் நண்பர்களிடம் உதவியாகப் பெற்றும் சில மாதங்கள் சமாளிக்க என்னால் முடியும்.எனவே, இந்த இக்கட்டான சூழலில் நான் சார்ந்த திரையுலக முதலாளிகளுக்கு கைம்மாறாக இதைச் செய்வதில் உள்ள படியே எனக்கு மிகுந்த மன நிறைவைத் தரும் என்று மனதார நம்புகிறேன். இவ்வாறு அருள்தாஸ் கூறி உள்ளார்.

More News >>