கேரள முதல்வருக்கு ராகவா லாரன்ஸ் கடிதம்.. பினராய் விஜயனுக்கு கோரிக்கை
நடிகர் ராகவா லாரன்ஸ் கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:மாண்புமிகு கேரள முதல்வருக்கு வணக்கங்கள்... கொரோனா தொற்று மீட்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து தாங்கள் செய்துவரும் அரும்பணியை கண்டு வியக்கிறேன். ஒருமுறை எனது தாயாருடன் தங்களைச் சந்தித்து நிவாரணத் தொகை வழங்கியதையும் பெருமையாகக் கருதுகிறேன். ஒரு சிறிய வேண்டுகோளை தங்களிடம் முன்வைக்கிறேன்.
திருவனந்தபுரத்தில் உள்ள NIMS மருத்துவமனையில் தமிழகத்தைச் சேர்ந்த வறுமையில் வாடும் பத்திரிகையாளர் அசோக் என்பவரின் தாயார் முடக்குவாதத்தால் அனுமதிக்கப்பட்டு, நேற்று மாலை மருத்துவமனையிலேயே உயிரிழந்த நிலையில், அவரது உடலைப் பிரேதப் பரிசோதனை செய்து, தமிழகத்தில் கன்னியாகுமரி சுசீந்திரம் பகுதிக்கு எடுத்துச்செல்ல வேண்டும்... கொரோனாவால் அவரால் மருத்துவமனைக்குச் செலுத்த வேண்டிய ஒன்றரை லட்சம் பணத்தைச் செலுத்த முடியாமல் தவிக்கிறார். அசோக் என்பவர் தாயை இழந்து கதறுவது குறித்து, மூத்த பத்திரிகையாளர் கொ.அன்பு குமார் மூலம் எனது உதவியாளர் புவனிடம் இருந்து சம்ந்தபட்ட நபரின் ஆடியோவை கேட்டு மிகுந்த துயருற்றேன்... ஒரு சிறிய வேண்டு கோளாக அவரது தாயாரின் உடலை மருத்துவ மனையிலிருந்து தமிழகம் எடுத்துச்செல்ல உடனடியாக தாங்கள் அனுமதிக்க வேண்டும்... அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவீர்கள் என்று முழுமையாக நம்புகிறேன். மருத்துவமனைக்குச் செலுத்தவேண்டிய பணத்தை ஓரிரு நாளில் நானே செலுத்திவிடுகிறேன் என்பதையும் தெரிவிக்கிறேன்... நன்றி. இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறி உள்ளார்.