போலீஸ்காரர்களிடம் ஆட்டோகிராப் வாங்கிய நடிகர் சூரி.. காக்கி சட்டை போட்ட எல்லைச்சாமிகள்..

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலிலிருந்து எல்லா மாநிலங்களிலும் மக்களைக் காக்கும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலும் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக நடிகர் சூரி இன்று காலை திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள டி1 காவல் நிலையத்திற்கு வருகை தந்திருந்தார். அங்கு பணியிலிருந்த காவல்ர்களுக்கு நன்றி சொன்ன அவர் போலீஸாரிடம் ஆட்டோகிராப் வாங்கினார்.பின்னர் சூரி கூறியதாவது:கொரோனா வைரஸ் பரவலால் உலகமே பயந்து கொண்டிருக்கும் இந்த வேலையில்,கொரோனாலிலிருந்து நமது உயிரைப் பாதுகாக்கும் விதிமுறைகளைத் தினந்தோறும் கூறி மக்களைக் காப்பதில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள் காவல் துறையினர். தங்களது உயிரையும் பெரிதென்று எண்ணாமல், இரவு பகல் பாராமல், 24 மணி நேரமும் மக்களின் உயிர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வழி நடத்திய அவர்களுக்குக் கோடி கோடி நன்றிகள்.

எங்கள் ஊரில் அய்யனார் சாமி தான் எல்லை சாமி, அது போல் தற்போது காவல் துறையினர் நம் எல்லோருக்கும் எல்லை சாமி போல் இருந்து நம்மைக் காத்து வருகின்றனர்.கடவுளை அன்றாடம் வணங்கும் நாம் அனைவரும், சமீப காலங்களாகக் காவல் துறையினையறையும் வணங்க ஆரம்பித்து விட்டோம்.

ஆனால் இந்த கொரோனா காவல்துறை நண்பர்களையும் விட்டு வைக்கவில்லை. இது வரை 60 காவல் துறையினர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளதாகக் கூறியுள்ளனர். அவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

சினிமாவில் தான் நாங்கள் கதாநாயகர்கள், ஆனால் போலீஸார் தான் உண்மையான கதாநாயகர்கள். எனவே நிஜ கதாநாயகர்களான இவர்களைச் சந்தித்து நன்றி கூறி, அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்க வேண்டும் என்று இன்று இங்கு வந்தேன். காவல் துறையினர், மருத்துவர்கள், தீயணைப்பு வீரர்கள், செவிலியர்கள் தூய்மை பணியாளர்கள், பத்திரிக்கை நண்பர்கள், இவர்கள் தான் நிஜ கதாநாயகர்கள். இவர்களிடம் ஆட்டோகிராப் வாங்கியதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன். இந்த நாள் என் வாழ்நாளில் மிக முக்கியமான நாளாக நினைக்கிறேன். இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு என்றென்றும் எனது மனதில் நிலைத்திருக்கும்.

இவ்வாறு சூரி கூறினார்.

More News >>