எந்த இடத்திலும் நித்தி நுழைய கூடாது - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான எந்த இடங்களிலும் நுழைய நித்யானந்தாவிற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை ஆதீனத்தின் 293ஆவது ஆதீனமாக நித்தியானந்தா தன்னை அறிவித்துக் கொண்டதை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த ஜெகதல பிரதாபன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆதீனம் மடத்துக்குள் நுழைய நித் யானந்தாவுக்கு இடைக்கால தடை விதித்தது.

இதற்கு பதில் மனு தாக்கல் செய்த நித்தியானந்தா, ‘‘நான்தான் மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதி என்றும், ஒருமுறை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டால் அவர் வாழ்க்கை முழுவதும் ஆதீனமாகவே இருப்பார். அந்த நியமனத்தை எவராலும் ரத்து செய்ய முடியாது’’ என்றும் கூறியிருந்தார். இதற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தால் பதில் மனுவை திரும்பப் பெற்ற நித்தியானந்தா அதற்காக மன்னிப்பும் கேட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று திங்களன்று (மார்ச் 5) நீதிபதி மகாதேவன் தீர்ப்பு வழங்கினார். அதில், ”நித்யானந்தா மதுரை ஆதீனத்திற்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சிவில் வழக்கு முடியும் வரை நித்தியானந்தா மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான எந்த இடங்களிலும் நுழைய தடை விதிக்கப்படுகிறது.

இந்த உத்தரவு முறையாக அமல்படுத்தப்படுவதை இந்து சமய அறநிலையத் துறை உறுதி செய்ய வேண்டும். அதையும் மீறி அவர் நுழைந்தால் காவல்துறை யின் உதவியுடன் உரிய நட வடிக்கை எடுக்கலாம். மதுரை ஆதீனம் உள்ளிட்ட எந்த ஆதீனம் மற்றும் மடத்தை சேர்ந்தவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டாலும் இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.

More News >>