கமல்ஹாசனை கருவிலே அழிக்காமல் விடமாட்டோம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கமல்ஹாசனை விமர்சனம் செய்வது ஏன்? என்ற கேள்விக்கு, கமல்தான் அதிமுகவை அழிக்க நினைக்கிறார். அவரை கருவிலே அழிக்காமல் விடமாட்டோம் என்று அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70 வது பிறந்தநாள் விழாவை அதிமுகவினர் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தேவதானத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி, ''காவிரி மேலாண்மை வாரியத்தைப் பொறுத்தமட்டில் தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கவில்லையென்றால் அடுத்தகட்ட முடிவை முதல்வர் எடுப்பார்” என்றார்.

பிறகு, ''நீங்கள் தொடர்ந்து கமல்ஹாசனை விமர்சனம் செய்வது ஏன்?'' என்ற கேள்வி எழுப்பியபோது, ''கமல்தான் அதிமுகவை அழிக்க நினைக்கிறார். அவரை கருவிலே அழிக்காமல் விடமாட்டோம். தமிழ்நாட்டு மக்களுக்கு ஒவ்வாமையான கருத்துகளைத் தெரிவித்து வருபவர். அவர் தமிழக மக்களுக்கு பாடுபடுபட மாட்டார்.

அம்மா மறைவுக்குப் பின்னால் கலைஞரால் செயல்பட முடியாத நிலை. அதனால் கமல் முதல்வராக நினைக்கிறார். ஜெயலலிதா இல்லை, கருணாநிதி இல்லை என்பதால் ஆட்சியை பிடித்துவிடாலாம் என கமல்ஹாசன் தப்புக்கணக்கு போட்டு அரசியல் கட்சி தொடங்கியுள்ளார்'' எனக் கூறினார்.

More News >>