சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. 6730 பேருக்கு நோய்த்தொற்று...

தமிழகத்தில் இது வரை 11,224 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 6730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.நாட்டில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாகப் பரவியிருக்கிறது. ஆரம்பத்தில் டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு கொரோனா பரவியிருந்தது. அடுத்ததாக, கோயம்பேடு மார்க்கெட் ஒரு கொரோனா ஹாட்ஸ்பாட் ஆக மாறி, அங்கிருந்து திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பல ஆயிரம் பேருக்கு நோய் பரவியது. அது கட்டுக்குள் வரும் நிலையில், தற்போது வெளிமாநிலங்களிலிருந்து கொரோனா பாதித்தவர்கள் திரும்புவதால், மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் நேற்று புதிதாக 639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 558 பேருக்கும், வெளிமாநிலத்திலிருந்து வந்த 81 பேருக்குமாக மொத்தம் 639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவிலிருந்து திரும்பிய 73 பேர், ராஜஸ்தான் 2, தெலங்கானா 3, ஆந்திரா 1 என்று 81 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது.

இதனால், மாநிலம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11,224 ஆக அதிகரித்துள்ளது. இதில் நேற்று பலியான 4 பேருடன் சேர்த்து உயிரிழப்பு 78 ஆனது. இது வரை 3 லட்சத்து 11,621 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.சென்னையில் புதிதாக 480 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு 6730 ஆக உயர்ந்துள்ளது. நேற்று செங்கல்பட்டில் 28, மதுரை 10, காஞ்சி 5, அரியலூர் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

தற்போதைய நிலையில், அரியலூர் 353 பேர், செங்கல்பட்டு 496, கடலூர் 417, திருவள்ளூர் 527, காஞ்சிபுரம் 180 என்று சில மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

More News >>