ரசிகர்களை ஈர்க்க தியேட்டருக்குள் மது விற்பனை? இயக்குனர் தந்த ஐடியாவால் அதிர்ச்சி..

கொரோனா ஊரடங்கால் திரைத்துறை கடந்த 50 நாட்களுக்கு மேலாக முடங்கியிருந்தது. சில தினங்களுக்கு முன்புதான் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு அரசு அனுமதி அளித்தது. ஆனால் இன்னமும் படப்பிடிப்பு தொடங்க அனுமதி கிடைக்கவில்லை. அது பற்றி அரசு விரைவில் முடிவெடுத்து அறிவிக்க உள்ளது.

மூடிக்கிடக்கும் சினிமா தியேட்டர்கள் திறப்பு எப்போது என்று யாராலும் யூகிக்க முடியாத நிலை உள்ளது. தியேட்டர்கள் திறந்தாலும் ரசிகர்கள் கூட்டம் வருமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது, இதற்கிடையில் புதிய படங்கள் ஒடிடி தளத்தில் வெளியிட விற்கப்படுகிறது. இது தியேட்டர் அதிபர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தியேட்டர்கள் திறந்தால் விஜய் நடித்த மாஸ்டர் படத்தைத் திரையிட்டால் தான் ரசிகர்களை தியேட்டர் பக்கம் ஈர்க்க முடியும் என்று எண்ணியிருக்கும் நிலையில் இயக்குனர் ஒருவர் தடாலடியாக ஐடியா கொடுத்து அதிர்ச்சி தந்திருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம் படத்தை இயக்கியவர் நாக் அஸ்வின். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், தியேட்டர்களுக்கு ரசிகர்களை ஈர்க்க வெளிநாடுகளில் உள்ளது போல் தியேடர்களில் மது விற்க அனுமதி தரலாம். ஆனால் இது நிரந்தர தீர்வு கிடையாது. அதற்கான வழிகளை ஆராய வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார். அதைப்பார்த்த சிலர் அதிர்ச்சி அடைந்து மது விற்றால் தியேட்டருக்கு பெண்கள் வரமாட்டார்கள் என்றனர். அதற்குப் பதில் அளித்த இயக்குனர், எல்லா தியேட்டரில் இல்லா விட்டாலும் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களிலாவது மது விற்க அனுமதி தரலாம் எனத் தெரிவித்திருக்கிறார்.

More News >>