ரூ 600 கோடி முடங்கியதால் பட ஷுட்டிங் பர்மிஷன் அவசியம்.. அமைச்சரிடம் பட அதிபர்கள் நேரில் மனு

50படங்களின் ஷுட்டிங் முடங்கியதால் சுமார் 600கோடி ரூபாய் முடங்கியிருக்கிறது. படப்பிடிப்பு தொடங்கினால் 10ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி சார்பில் இன்று செய்தித் துறை அமைச்சரை கடம்பூர் ராஜுவை நேரில் சந்தித்து தயாரிப்பாளர்கள் டி. சிவா, மனோபாலா, பி எல் . தேனப்பன், ஜே எஸ் கே . சதிஷ் குமார், ஜி. தனஞ் செயன், ஆர் கே . சுரேஷ், சுரேஷ் காமாட்சி, பஞ்சு சுப்பு மற்றும் விடியல் ராஜு ஆகியோர் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது :முழுமையடையாமல் நிற்கும் திரைப்படங்களின் ஷூட்டிங் பணிகளுக்கு அனுமதி கோரி முதலமைச்சருக்கு, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் பணிவான வணக்கம்.

தமிழகத்தில் ஊரடங்கு சட்டம் அமலுக்கு வரும் முன்பே, தமிழ்த் திரைப்படத் துறை ஷூட்டிங் மற்றும் இதர போஸ்ட்-புரொடக்சன் வேலைகளை 16.3.2020 முதல் அமல்படுத்தி தற்போது 50 நாட்களுக்கு மேலாகத் திரைப்படத் துறை சம்பந்தப்பட்ட எந்த ஷூட்டிங் வேலைகளும் நடக்கவில்லை. தங்களின் கனிவான ஒப்புதலால், போஸ்ட்-புரொடக்ஷன் பணிகள் மட்டும் 11.5.2020 முதல் தொடங்கி தற்போது நடந்து வருகிறது. என்றாலும் ஏறக்குறைய படப்பிடிப்பு நடத்தப்பட்டு, சில நாட்கள் மட்டும் ஷூட்டிங் செய்து முடிக்க வேண்டிய படங்கள் 50-க்கும் மேல் உள்ளன. இதனால் ஏறக்குறைய 600 கோடி ரூபாய் முதலீடு முடங்கியுள்ளது. 50-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம் இதனால் கேள்விக்குறியாக மாறியுள்ளது.தற்போது போஸ்ட்-புரொடக்ஷன் பணிகளை, தயாரிப்பாளர்களாகிய நாங்கள் சமூக இடைவெளியுடனும், முகக்கவசம் மற்றும் சானிடைஸிர் உபயோகித்தும், சுகாதாரமான முறையில் மத்திய மாநில அரசுகள் விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் பின்பற்றி, மிகவும் கவன மாக செய்து வருகிறோம். அதே போல், ஷூட்டிங் பணிகளையும் மிகுந்த கவனத்துடன் செய்ய நாங்கள் உறுதி அளிக்கிறோம்.

11 தொழிற்துறைகளுக்கு எவ்வாறு தற்போது நிபந்தனையுடன் கூடிய அனுமதி (100 பேருக்கும் குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகளில் 100 சதவீதம் பணியாளர்கள் பணிபுரிய அனுமதி) வழங்கியிருப்பதைப் போன்று, 50 சதவீதம் திரைத்துறை தொழிலாளர்களுடன் (அதிகபட்சம் 100 பேர் மட்டும் பங்கு கொள்ளும்) நாங்கள் ஷூட்டிங் பணிகளையும் தொடர அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.ஏற்கனவே திரைப்படங்களை தொடங்கி முழுமையடையாமல் இருக்கும் 50 படங்களுக்கு தற்போது இந்த ஷூட்டிங் அனுமதி கோருகிறோம். இந்த ஷூட்டிங் அனுமதி மூலம், திரைத்துறை சம்பந்தப்பட்ட 10,000 மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலையும் கிடைக்கும். எனவே கனிவுடன் எங்களின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

More News >>