இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது.. ஒரே நாளில் 134 பேர் பலி..

இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது. நேற்று ஒரே நாளில் 4970 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 134 பேர் பலியாகினர். சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவியிருக்கிறது. இந்தியாவில் இன்னும் கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. தினமும் புதிதாக 3, 4 ஆயிரம் பேருக்காவது கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது.மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று(மே 19) காலை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. இது வரை மொத்தம் ஒரு லட்சத்து 1139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 39,173 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 3163 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் நேற்று மட்டும் புதிதாக 4970 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அதே போல், நேற்று மட்டும் கொரோனா பாதித்த 134 பேர் பலியாகியுள்ளனர்.மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மகாராஷ்டிராவில் 33,053 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், 1196 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 11,379 பேருக்கு நோய் பாதித்த நிலையில், 659 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் 11,760 பேருக்கு கொரோனா பாதித்ததில், 81 பேர் பலியாகியுள்ளனர்.

More News >>