அம்பன் புயல் தீவிரம்.. ஒடிசாவில் முகாம்களில் ஒரு லட்சம் பேர் தஞ்சம்..

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள அம்பன் புயல், இன்று பிற்பகலில் மேற்குவங்கம் மற்றும் வங்கதேசம் இடையே கரை கடக்கிறது. புயலின் தீவிரம் காரணமாக ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் ஒரு லட்சம் பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.வங்கக் கடலில் உருவான அம்பன் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக் கடலில் ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்தில் இருந்து 480 கி.மீ. தொலைவில் நேற்று மையம் கொண்டிருந்தது. அது நகர்ந்து தற்போது பாரதீப்பில் இருந்து தென்கிழக்கில் 125 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருக்கிறது.

இந்த அம்பன் புயல் இன்று மாலைக்குள் மேற்குவங்கத்தின் திகா மற்றும் வங்கதேச நாட்டின் ஹட்டியா தீவுக்கு இடையே கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.புயல் கரையைக் கடக்கும் போது, ஒடிசா, மேற்கு வங்க மாநில கடலோரப் பகுதிகளில் மணிக்கு 165 முதல் 185 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் இன்று காலை முதலே புயல் காற்று வீசத் தொடங்கி விட்டது. புயலின் தீவிரம் காரணமாக அந்த மாவட்டங்களில் ஒரு லட்சம் பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். கேந்திரபாராவில் 32,060 பேர், பாட்ராக்கில் 26,174 பேர், பாலசோரில் 23,142 பேர் என்று நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

More News >>