தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 13 ஆயிரம் தாண்டியது.. சென்னையில் 8228 பேருக்கு பரவியது..

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 13 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சென்னையில் மட்டுமே இது வரை 8228 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு மாநிலங்களில் அதிகம் பேருக்கு பரவியுள்ளது. தமிழகத்தில் தினமும் புதிதாக 500 பேருக்கு மேல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.

தமிழக அரசு நேற்று(மே20) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 743 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதில் மகாராஷ்டிராவில் இருந்து திரும்பி வந்த 83 பேரும் அடங்குவர். தற்போது மாநிலம் முழுவதும் 13,191 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இதில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 987 பேரையும் சேர்த்து மொத்தம் 5882 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு நேற்று 3 உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 87 ஆக உயர்ந்தது. நேற்று 11,441 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் 3 லட்சத்து 43,793 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

சென்னையில்தான் வழக்கம் போல் நேற்றும் புதிதாக 557 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், சென்னையில் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 8228 ஆக அதிகரித்துள்ளது. இது தவிர செங்கல்பட்டில் 58 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 14 பேருக்கும், மதுரையில் 9பேருக்கும் மற்ற மாவட்டங்களில் ஓரிருவருக்கும் நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.ஆரம்பத்தில் டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்கள் மூலமும், அடுத்ததாக கோயம்பேடு மார்க்கெட் மூலமும் கொரோனா பரவியிருந்தது. தற்போது அவை கட்டுப்பட்டு விட்டாலும், மகாராஷ்டிரா உள்பட பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் மூலமாக கொரோனா பரவி வருகிறது. சென்னை தவிர பிற மாவட்டங்களில், வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமே இப்போது கொரோனா தொற்று உள்ளது. மற்றபடி அந்த மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக இல்லை.

More News >>