திரிஷாவுடன் சிம்பு போனில் பேசுவதைப் பார்த்த 40 லட்சம் பேர்.. ஐ லவ் யூ சொல்லிக்கொண்டனர்..

'விண்ணைத் தாண்டி வருவாயா' திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அது நினைவு கூரத்தக்கப் படமாகவே இருக்கிறது. கசப்பும் இனிப்பும் கலந்த கார்த்திக் ஜெசியின் காதல் பயணம், வெண் திரையுடன் நின்று விடாமல், பல லட்சம் ரசிகர்களின் கற்பனை சாம்ராஜ்யத்திலும் கனவாகத் தொடர்ந்து வருகிறது. ஜெசிக்கு விடை கொடுத்துவிட்டுத் தளராத மனதுடன் காத்திருப்பது, அடுத்த பயணத்துக்கான தொடக்கம் என்பது கார்த்திக்கின் அந்தரங்கம் மட்டுமே அறிந்த ஒன்று. 'இப்போதைக்குக் குறும்படம்' என்ற அடை மொழியுடன் வந்திருக்கும் கவுதம் வாசுதேவ் மேனனின் 'கார்த்திக் டயல் செய்த எண்' குறும்படம் கொண்டாடத் தூண்டுவதாகத் திரை ரசிகர்களுக்கு அமைந்திருக்கிறது. இந்த பன்னிரண்டு நிமிட குறும்படம் 48 மணி நேரத்தில் நாற்பது லட்சம் பார்வையாளர்களை கொண்டாட வைத்திருக்கிறது. இதில் எஸ்டிஆர் (சிம்பு), திரிஷா இருவரும் ஐ லவ் யூ சொல்லிக்கொண்டனர்.

இது குறித்து விவரித்த கவுதம் வாசுதேவ் மேனன், "கார்த்திக் டயல் செய்த எண் குறும் படத்துக்குக் கிடைத்த வரவேற்பு கண்டு நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன்" என்றார். அவர் மேலும் கூறும்போது,"ஏற்கெனவே வெற்றி பெற்ற ஒரு படத்தின் தொடர்ச்சியை எடுக்கும் போது, பல கடுமையான இடையூறுகளை எதிர்கொண்டு சமாளித்தும், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தும் தான் இயக்குநர் வெற்றி பெற வேண்டும். வெற்றிப் படைப்பின் பாதிப்பு நீண்ட காலத்துக்கு இருக்கும் என்பதால், மூலக்கதையின் உயிரோட்டம் கெடாமல், கதாபாத்திரங்களுக்கிடையிலான உள்ளார்ந்த முரண்பாடுகளை நான் திரைக் கதையில் கொண்டு வர வேண்டும்.

இந்தப் பணி இப்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த குறும்படத்துக்குக் கிடைத்த வரவேற்பே எனக்குப் பெரு மகிழ்ச்சியைத் தருகிறது. எஸ்.டி.ஆர்., திரிஷா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இல்லாமல் மகத்தான வெற்றியைப் பெற முடியாதுதான். ஆயினும் எனது எண்ணங்களுக்குச் செயல் வடிவம் கொடுத்த எனது தொழில் நுட்பக் குழுவினருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்" என்றார்.அது சரி இப்போதைக்குக் குறும்படம் என்ற அடைமொழி எதற்கு புதிய பரிணாமத்தில் கார்த்திக் ஜெசியின் காதல் பயணத்தை நாம் எதிர்பார்க்கலாமா. இது குறித்துக் கேட்டபோது, அர்த்த புஷ்டி மிக்க புன்னகையுடன் "இந்தப் பயணம் தொடரும்" என்றார்.

More News >>