ஒடிசா சிறப்பு ரயிலில் குழந்தை பெற்ற பெண்.. மருத்துவமனையில் சேர்ப்பு..

தெலங்கானாவிலிருந்து ஒடிசாவுக்குச் சென்ற சிறப்பு ரயிலில் ஒரு பெண்ணுக்குப் பிரசவம் நடந்தது. ஆண் குழந்தையைப் பெற்ற அந்த பெண் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி அறிவிப்பின்படி, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அன்று முதல் நாடு முழுவதும் ரயில்கள் ஓடவில்லை.

இந்நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, இருப்பிட வசதி கிடைக்காமல், 1000 கி.மீ. தூரம் வரை நடக்க ஆரம்பித்தனர். இதில் ஏராளமானோர் விபத்துகளில் சிக்கியும், நோய்வாய்ப்பட்டும் பலியாகினர். இது நாடு முழுவதும் பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது.இதைத் தொடர்ந்து, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்காக பல்வேறு சிறப்பு ரயில்களை இயக்கப்பட்டது.

இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத்திலிருந்து ஒடிசாவுக்கு நேற்று(மே23) இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் குந்தி நாக் நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் பயணம் செய்தார். அவருக்கு திடீரென பிரசவ வலி வரவே, அந்த ரயில் பெட்டியில் உள்ள பெண்களின் உதவியுடன் அவருக்கு அங்கேயே பிரசவம் பார்க்கப்பட்டது. அவர் அழகான ஆண் குழந்தையைப் பெற்றார்.

இதன்பின், ரயில் ஒடிசா மாநிலம் பலான்கிர் வந்ததும், அந்தப் பெண்ணும், அவரது கணவர் துப்ளே நாக் மற்றும் பிறந்த குழந்தையுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்குக் குந்தி நாக் மற்றும் குழந்தை சேர்க்கப்பட்டு, தற்போது நலமாக உள்ளனர். ஏற்கனவே தமிழ்நாட்டிலிருந்து மத்தியப் பிரதேசத்திற்குச் சென்ற கமலா என்ற பெண்ணுக்கு இதே போல் சிறப்பு ரயிலில் ஆண் குழந்தை பிறந்தது. விஜயவாடா ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும், அவரை குழந்தையுடன் அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையுடன் 3 நாட்களுக்குப் பிறகு அவர் சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றார்.

More News >>