சென்னையில் வேகமாக பரவும் கொரோனா.. 12 ஆயிரம் பேருக்குப் பாதிப்பு..

தமிழகத்தில் நேற்று மட்டும் 817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், சென்னையில் மட்டும் 558 பேருக்கு நோய்த் தொற்று பாதித்துள்ளது. சீன வைரஸ் நோயான கொரோனா இந்தியா முழுவதும் பரவியிருக்கிறது. இது வரை ஒன்றே கால் லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4200 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவது இன்னும் கட்டுப்படவில்லை.தினம்தோறும் சராசரியாக 700 பேருக்கு மேல் பரவி வருகிறது. நேற்று(மே27) மட்டும் புதிதாக 817 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில் மகாராஷ்டிராவில் இருந்து வந்த 138 பேர் மற்றும் கேரளாவில் இருந்து வந்த ஒருவரும் அடக்கம்.

இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,545 பேராக அதிகரித்துள்ளது. இதில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 567 பேரையும் சேர்த்து மொத்தம் 9909 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு நேற்று 6 பேர் உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகமாகப் பரவி வருகிறது. தினமும் 500 பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 558 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 12,203 ஆக அதிகரித்துள்ளது. சென்னை தவிர அரியலூரில் 4 பேர், செங்கல்பட்டில் 31 பேர் மற்றும் திருவள்ளூரில் 40 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா நேற்று கண்டறியப்பட்டது.

More News >>