நடிகர், நடிகை 60 பேர்களுடன் நாளை முதல் டிவி படப்பிடிப்பு தொடங்கலாம்.. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..

டிவி படப்பிடிப்பை நாளை முதல் தொடங்கலாம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (STEPS) கோரிக்கையை ஏற்று சில நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு 21. 5. 2020 அன்று நான் அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தேன்.

அனுமதி அளிக்கப்பட்ட அதிகபட்ச 20 நடிகர், நடிகை மற்றும் தொழில் நுட்ப பணியாளர்கள் கொண்டு படப்பிடிப்பை நடத்த இயலாத சூழ்நிலை உள்ளதாகவும் இதனை உயர்த்தி அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்தியச் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் செய்தித்துறை அமைச்சரைச் சந்தித்து கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கை குறித்து செய்தித் துறை அமைச்சர் என்னுடன் கலந்தாலோசித்தார். மேற்படி சங்கத்தினர் கோரிக்கை ஏற்று அதிகபட்சமாக 60 நடிகர் நடிகை, தொழில்நுட்ப பணியாளர்களைக் கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை 31. 5. 2020 (நாளை) முதல் நடத்த அனுமதித்து உத்தரவிடப்படுகிறது.

சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடமும் பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்குச் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒவ்வொரு சின்னத்திரை தொடரின் முழு படப்பிடிப்பும் ஒருமுறை மட்டும் அனுமதி பெறுதல் வேண்டும். சின்னத்திரை படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அனைவரும் மத்திய மாநில அரசுகள் அவ்வப்போது விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். சின்னத்திரை தயாரிப்பாளர்கள் அதனை உறுதி செய்து கொண்டு படப்பிடிப்புகள் நடத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

More News >>