சினிமா பாடகர் சத்யனின் 24 மணி நேரலையாக பாடுகிறார்.. மெல்லிசை கலைஞர்களுக்கு நிதி திரட்டுகிறார்..

கமல்ஹாசன் நடித்த, வசூல்ராஜா எம்.பி.பி எஸ் என்ற திரைப்படத்தில் கலக்கப்போவது யாரு என்ற பாடல் மூலம் தமிழ் திரையுலகிற்கு 2004 ல் அறிமுகம் ஆனவர் சத்யன் மகாலிங்கம் . திரைப்பட பின்னணிப் பாடகர் மற்றும் இசை அமைப்பாளருமான இவர் அறிந்தும் அறியாமலும் படத்தில் சில் சில் மழையே.., பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் பாசு பாசு.., போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைத் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பாடியுள்ளார்.

விழித்திரு திரைப்படம் மூலம் இசை அமைப்பாளர் ஆனார். தற்பொழுது மேலும் சில தென்னிந்தியப் படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். கடந்த சில மாதங்களாக முகநூலில் நேரலையாக மக்களை மகிழ்விக்கப் பாடிவந்த சத்யன் மகாலிங்கம், மார்ச் 22ம் தேதி நடந்த ஓர் நாள் மக்கள் ஊரடங்கு அன்று, 14 மணி நேரம் பாடி, வீட்டிலிருந்த மக்களை மகிழ்வித்தார். கொரோனா பாதிப்பாலும், தொடர் ஊரடங்கினாலும் , வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மேடை மெல்லிசை கலைஞர்களின் நிலையைக் கண்டும், அவர்கள் எதிர்காலத்தை எண்ணியும் வருந்திய சத்யன் மகாலிங்கம், அவர்களுக்காக முகநூலில் கடந்த 55 நாட்களாக இடைவிடாது தினமும் இரவு 7 மணி முதல் பாடி வருகிறார். இவரின் தன்னலமற்ற செயலையும், அசாத்தியமான இசை திறமையையும் கண்ட பலரும் தங்கள் உதவிக் கரங்களை பல்வேறு நாடுகளிலிருந்து முன்வைத்து வருகின்றனர்.

அது மட்டுமின்றி, மிகுந்த கஷ்டத்தில் இருக்கும் திறமையான மேடை மெல்லிசை கலைஞர்களைத் தேர்வு செய்து, நேரலையில் அவருடன் இணைந்து பாடவைத்து , சத்யன் மகாலிங்கம் உதவி அணுகினார். அண்ணா நகர் விமலம் மெஸ், சிங்கப்பூர் அப்பலோ செல்லப்பாஸ் மற்றும் சிங்கப்பூர் பனானா லீப் ரெஸ்டாரன்ட், நலிந்த கலைஞர்களுக்கான சத்யன் மகாலிங்கம் செய்யும் நிகழ்ச்சிகளுக்குத் தானாகவே முன் வந்து முக்கிய ஆதரவாளர்களாக ஆகினர்.

55 நாட்களைக் கடந்த சத்யனின் இந்த நிதி திரட்டும் விடாமுயற்சியின் இறுதிக்கட்டமாக மே 30 ம் தேதி மாலை 7 மணி முதல், 31 ம் தேதி மாலை 7 மணி வரை, 24 மணி நேரம் தொடர்ச்சியாகத் தனது முகநூல் நேரலையில் பாடி மேடை மெல்லிசை கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ முடிவெடுத்துள்ளார்.

More News >>