சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி கொடுங்கள்.. முதல்வருக்கு பாரதிராஜா கோரிக்கை..

டைரக்டர் பாரதிராஜா தேனியில் தனது வீட்டில் தங்கி இருக்கிறார். அங்கிருந்தபடி அவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:படிப்படியாக மக்களின் அன்றாட வாழ்வை மீட்டுக் கொண்டிருக்கும் சிறப்பு மிகுந்த பணிக்கும், அயரா உழைப்பிற்கும் பாராட்டுக்கள். விதிகள் தளர்த்தி சின்னத்திரை படப்பிடிப்பிற்கு 60பேர் கொண்ட குழு கலந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது உள்ள படியே மகிழ்ச்சியளிக்கிறது. நன்றிகள்.

அதேசமயம் சினிமாவும் முடங்கிப்போய் கிடக்கிறது. திரையரங்குகள்,விநியோகஸ்தர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் அடுத்த நிலை என்ன எனத் திணறி வருகிறோம். பலர் உணவுக்கே வழியின்றி சிரமப்படுகிறார்கள். முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் வட்டி கட்ட முடியாது திகைக்கின்றனர். பணம் கொடுத்தவர்களும் போட்ட பணத்திற்கான வரவு வழி தெரியாததால் நஷ்டப்பட்டுப் போய் உள்ளனர்.

சினிமாவை நசிந்து விடாமல் காக்க வேண்டிய நிலையில் உள்ளோம். முதல்வர் அவர்கள் சின்னத்திரை படப்பிடிப்பிற்கு அனுமதி கொடுத்துள்ளதை போன்ற ஒரு அனுமதியை சினிமாவுக்கும் படப்பிடிப்பைத் தொடங்க கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அரசு வரையறுக்கும் கட்டுப்பாடு , பாதுகாப்பு முறைகளுடன் இயங்குவோம் என உறுதியளிக்கிறோம். இதன்மூலம் சிறுபடங்கள் படப்பிடிப்பிற்கு செல்ல ஏதுவாக அமையும். திரையரங்குகளும் தங்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றித் திறந்து செயல்பட திரையுலகினர் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன் .இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார் .

More News >>