திமுக பொருளாளராக துரைமுருகன் நீடிக்கிறார்.. ஸ்டாலின் தகவல்..

திமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் சமீபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து, அந்த பதவிக்கு புதியவரைத் தேர்வு செய்வதற்காகக் கடந்த மாதம் கட்சியின் பொதுக்குழு கூடுவதாக இருந்தது. பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியிட விரும்பியதால் ஏற்கனவே அவர் வகித்த பொருளாளர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து, பொதுச் செயலாளர் பதவியுடன், பொருளாளர் பதவிக்கும் பொதுக்குழுவில் தேர்தல் நடக்கும் என்று கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காகத் தமிழகம் முழுவதும் அனைத்து பொது நிகழ்ச்சிகளையும் ரத்து செய்ய அரசு உத்தரவிட்டது. இதனால், திமுக பொதுக்குழுக் கூட்டமும் ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால், இன்னும் கொரோனா ஊரடங்கு முழுமையாக விலக்கப்படாததால், திமுக பொதுக்குழு கூடவே இல்லை. இதையடுத்து, பொதுக் குழு கூடும் வரை திமுக பொருளாளராக துரைமுருகனே நீடிப்பார் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

More News >>