சென்னையில் வேகமெடுக்கும் கொரோனா நோய்ப் பரவல்.. பாதிப்பு 17 ஆயிரம் தாண்டியது

தமிழகத்தில் இது வரை கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 25,872 ஆக உயர்ந்துள்ளது. 208 பேர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர்.சீன வைரஸ் நோயான கொரோனா இப்போது அந்த நாட்டில் கட்டுப்பட்டு விட்டாலும், உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில் 2 லட்சம் பேருக்கு மேல் பரவியிருக்கிறது.

தமிழகத்தில் தினமும் புதிதாக 800, 900 பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவி வருகிறது. நேற்று(ஜூன்3) மட்டும் புதிதாக 1286 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த 2 பேரும், துபாயில் இருந்து வந்த 13 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 27 பேரும் அடக்கம். மேலும், மகாராஷ்டிராவில் இருந்து 16 பேர், கர்நாடகாவில் இருந்து 3 பேர், குஜராத்தில் இருந்து 3 பேர், டெல்லியில் இருந்து 5 பேர் என்று 27 பேருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

தற்போது, தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,872 ஆக அதிகரித்துள்ளது. இதில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 610 பேரையும் சேர்த்து மொத்தம் 14,316 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு நேற்று 11 பேர் உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 14,101 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தத்தில் இது வரையில் 5 லட்சத்து 28,534 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

சென்னையில் தினமும் 800 பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. நேற்று அதிகபட்சமாக 1012 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 17,598 ஆக அதிகரித்துள்ளது.செங்கல்பட்டில் 61 பேர், திருவள்ளூரில் 58 பேர், காஞ்சிபுரத்தில் 19 பேர், திருவண்ணாமலையில் 16 பேர், தூத்துக்குடியில் 17 பேர் மற்றும் நெல்லையில் 6 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது நேற்று தெரியவந்தது.

More News >>