அமெரிக்க இனவெறிக்கு எதிராக மன்சூர் குரல்.. அனைவரும் இணைய வேண்டுகோள்..

இனவெறி காரணமாக அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் தலைமைக் காவலரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவிலேயே இதற்கு எதிராக மக்கள் இறங்கிப் போராடி வருகின்றனர் சினிமா, விளையாட்டு சேர்ந்தவர்களும் எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகிறார்கள்.

இது குறித்து நடிகர், தயாரிப்பாளர் மன்சூரலிகான் கூறியிருப்பதாவது:உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மூலம் மக்களைப் பீதியடையச் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலும் மக்களிடம் கொரோனா பயத்தை அதிகரிக்கச் செய்திருக்கும் அரசு, மக்களின் வாழ்வாதாரத்திற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது. இதனால் கொரோனாவால் உயிரிழப்பதைக் காட்டிலும், பசியால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலைமாற வேண்டும் என்றும், இதற்காக மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும், என்றும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

அதே சமயம், அமெரிக்காவில் இனவெறி காரணமாக கொடூரமாகக் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட்டுக்கு இதய அஞ்சலி செலுத்துவதோடு, இப்படிப்பட்ட சம்பவத்திற்கு எதிராக அமெரிக்காவில் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.உலகமே இக்கட்டான சூழலில் இருக்கும் போது, இப்படி ஒரு இனவெறி கொலையை அரங்கேற்றியவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதோடு, இதுபோன்ற இனவெறி சம்பவங்களுக்கு எதிராக அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு மன்சூராலிகான் அறிக்கையில் கூறி உள்ளார்.

More News >>