தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 33 ஆயிரமானது.. பலி 286 ஆக அதிகரிப்பு..

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்துள்ளது. இந்நோயால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 286 ஆக உயர்ந்துள்ளது. சீன வைரஸ் நோயான கொரோனா இந்தியாவில் தற்போது தான் வேகமாகப் பரவி வருகிறது. தினமும் 10 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்படுகிறது.

தமிழகத்திலும் கடந்த சில நாட்களாகத் தினமும் புதிதாக 1000 பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 1562 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், கத்தாரில் இருந்து வந்த 9 பேருக்கும், குவைத்தில் இருந்து வந்த 3 பேர், டெல்லி 7 பேர், மகாராஷ்டிரா 22 பேர், அரியானாவில் இருந்து வந்த ஒருவர் என்று 42 பேரும் அடக்கம்.

தமிழகத்தில் தற்போது 33,229 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 528 பேரையும் சேர்த்து மொத்தம் 17.527 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு நேற்று 17 பேர் உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 286 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று 14,454 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தத்தில் இது வரையில் 6 லட்சத்து 7952 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

சென்னையில் நேற்று 1149 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 23,928 ஆக அதிகரித்துள்ளது.செங்கல்பட்டில் நேற்று 134 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1988 ஆக உள்ளது. இதே போல், திருவள்ளூரில் 1386 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 534 பேருக்கும், திருவண்ணாமலையில் 503 பேருக்கும் கொரோனா பரவியிருக்கிறது. மற்ற மாவட்டங்களில் 500க்கும் குறைவானவர்களுக்கு நோய் பரவியிருக்கிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருப்பத்தூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே 100க்கும் குறைவானவர்களுக்கு நோய் பாதித்துள்ளது.

More News >>