10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து.. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..

தமிழகத்தில் இந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருந்தாலும், தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. குறிப்பாக, சென்னையில் மட்டுமே 24 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதனால், சென்னையில் பஸ், மின்சார ரயில் போக்குவரத்து இன்னும் துவங்கவில்லை.

இதற்கிடையே, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, ஜூன் 15ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரையிலும் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தினமும் ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பரவுவதால், மாணவர்களுடன் உயிரோடு விளையாடாமல் 10, 11, 12ம் வகுப்புத் தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டுமென்று மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டனர்.

இதற்கிடையே, தேர்வை 2 மாதங்களுக்குத் தள்ளிவைக்க வேண்டுமென்று கோரி, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பக்தவச்சலம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் ஆகியோர் விசாரித்தனர். தமிழக அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் ஆஜராகி, 10ம் வகுப்புத் தேர்வுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்து வைக்கப்பட்டு விட்டது. இப்போது 10ம் வகுப்புத் தேர்வு நடத்தாவிட்டால், பின்னாளில் நடத்துவது மிகவும் சிரமம். காரணம், அடுத்த மாதத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக வாய்ப்பு உள்ளது. எனவே, தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வாதாடினார்.

இதன்பின், பொதுத் தேர்வை ஏன் ஜூலை மாதத்திற்குத் தள்ளி வைக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர். மேலும், இந்த வழக்கின் விசாரணையை வரும் 11ம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.

இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக ஐகோர்ட் எழுப்பியுள்ள கேள்விகள் குறித்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, 10ம் வகுப்ப பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்தார். ஒத்திவைக்கப்பட்ட 11-ம் வகுப்புத் தேர்வும், விடுபட்டவர்களுக்கான பிளஸ் 2 மறுதேர்வும் மீண்டும் ஒத்தி வைக்கப்படுவதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும். காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களில் 80 சதவீதமும், வருகைப்பதிவுக்கு 20 சதவீதமும் எடுத்து மதிப்பெண் பட்டியல் தயாரித்து வெளியிடப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

More News >>