அசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் சுசீந்திரன் உதவியாளர் இயக்கும் படம்.. கெனன்யா நிறுவன 7வது தயாரிப்பு..

ஹாலிவுட்டில் அற்புதமான குடும்ப படங்கள் Dramedy எனும் ஜானரில் (தளம்) உருவாகிறது. இந்த வார்த்தை வரும் முன்பே தமிழில் இதுபோன்ற படங்கள் வந்திருக்கிறது. உறவுகளின் சிக்கல்களை, மேன்மையை, உணர்வுப்பூர்வமாக, நகைச்சுவை கலந்து சொன்ன கதைகள் இங்கு ஏராளம். அந்த பாணியில் கெனன்யா ஃப்லிம்ஸ் தயாரிப்பாளர் ஜெ.செல்வகுமார் நகைச்சுவை பொங்கும் உணர்வுப்பூர்வமான குடும்ப காமெடி படத்தைத் தனது அடுத்த தயாரிப்பாகத் தயாரிக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத “தயாரிப்பு எண் 7 ஆக உருவாகும் இதில் அசோக் செல்வன், நிஹாரிகா ஜோடியாக நடிக்கிறார்கள். புதுமுகம் ஸ்வாதினி இயக்குகிறார். இவர் இயக்குநர் சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இப்படத்தின் தொடக்க விழா நடந்தது. இதில் இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் பாடல் பணிகளைத் தொடங்கினார்.

அசோக் செல்வன் நடிக்கும் இப்படம் பற்றி கெனன்யா ஃப்லிம்ஸ் தயாரிப்பாளர் ஜெ.செல்வகுமார் கூறும்போது. எங்களின் கெனன்யா ஃப்லிம்ஸ் சார்பில் எப்போதும் புதிய இளம் திறமைகளை அறிமுகம் செய்வதிலும் உலகமெங்கும் இருக்கும் அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் படியான வித்தியாசமான கதைகளைத் தயாரிப்பதையும் முக்கிய குறிக்கோளாகக் கொண்டிருக்கிறோம். நான் எப்போதும் பாலிவுட்டில் Rajshri Productions நிறுவனம் தொடர்ந்து தயாரிக்கும் பெரும் வெற்றி தரும் குடும்ப டிராமாக்களை வியந்து பார்த்திருக்கிறேன். அவர்கள் தயாரித்த “ஹம் ஆஃப் கே ஹெய்ன் கோன்”, “ஹம் சாத் சாத் ஹெய்ன்” போன்ற படங்கள் என்னைப் பெரிதும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. அந்த வகையில் அதே போன்று குடும்ப உணர்வுகள், காதல், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு கதையைத் தேடியபோது இயக்குநர் ஸ்வாதினி அப்படியான ஒரு அட்டகாசமான திரைக்கதையுடன் என்னை அணுகினார். அதுமட்டுமல்லாமல் அவர் மேலும் ஒரு வருட காலம் தனது திரைக் கதையில் வேலை செய்து, குடும்ப உணர்வுகள் பொங்க, காதல், காமெடி சரிவிகிதத்தில் இருப்பது மாதிரி திரைக் கதையை மெருகேற்றினார். அவரது கடும் உழைப்பு என்னை ஈர்த்தது.

“ஓ மை கடவுளே” மூலம் வெற்றியின் உச்சத்தைத் தொட்டிருக்கும் அசோக் செல்வனுடன் மீண்டும் இணைவது எங்கள் நிறுவனத்திற்கு பெரும் பலம். அற்புதமான திறமை கொண்ட, உணர்வுகளை எளிதில் திரையில் காட்டும் நடிகை நிஹாரிகா படத்தில் இணைந்திருப்பது மேலும் மகிழ்ச்சி. இன்று இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் மேற்பார்வையில் பாடல் வேலைகளைத் துவக்கி, படத்தை ஆரம்பித்துள்ளோம். தற்போதைய சூழல் முழுக்க சமநிலையை அடைந்த பின் படப்பிடிப்பைத் துவக்கவுள்ளோம். படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்த பிறகான ஐந்தாவது மாதத்தில், படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம் என்றார். ஒளிப்பதிவாளராக ஏஆர் சூர்யா, படத்தொகுப்பாளராக ரிச்சர்ட் கெவின் பணிபுரிகின்றனர். படத்தில் மேலும் பணிபுரியவுள்ள நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை இறுதி செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது.

More News >>