தமிழகத்தில் 37 ஆயிரம் பேருக்கு கொரோனா.. பலி 332 ஆக அதிகரிப்பு..

தமிழகத்தில் இது வரை 37 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. கொரோனாவால் 332 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மாநிலங்களில் இதன் வேகம் அதிகமாகக் காணப்படுகிறது. தமிழகத்திலும் கடந்த சில நாட்களாகத் தினமும் புதிதாக 1000 பேருக்கும் மேல் கொரோனா தொற்று பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 1927 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 30 பேரும் அடக்கம்.

குவைத் 2, சவுதி 1, மாலத்தீவு 1, டெல்லி 4, மகாராஷ்டிரா 8, கேரளா 4, கர்நாடகா 4, ஆந்திரா 3, காஷ்மீர் 1, ராஜஸ்தான் 1, உ.பி.1 என்று வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.தமிழகத்தில் தற்போது 36,841 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. கொரோனாவுக்கு நேற்று 19 பேர் உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 326 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், இன்று சென்னையில் 6 பேர் பலியானார்கள். இதனால், பலி எண்ணிக்கை 332 ஆனது.தமிழகத்தில் நேற்று 16,667 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தத்தில் இது வரையில் 6 லட்சத்து 9856 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் நேற்று 1390 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 25,937 ஆக அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டில் நேற்று 182 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2328 ஆக உள்ளது. இதே போல், திருவள்ளூரில் 1581 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 600 பேருக்கும் கொரோனா பரவியிருக்கிறது. மற்ற மாவட்டங்களில் 500க்கும் குறைவானவர்களுக்கு நோய் பரவியிருக்கிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருப்பத்தூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே 100க்கும் குறைவானவர்களுக்கு நோய் பாதித்துள்ளது.

More News >>