தலைவன் இருக்கிறானில் 19 வருடத்துக்குப் பிறகு இணையும் கமல், ரஹ்மான்..

கமல்ஹாசன் படம் என்றால் இளையராஜா தான் பெரும்பாலும் இசை அமைப்பார். தேவர் மகன் படத்துக்கும் இளையராஜா தான் இசை அமைத்தார். ஆனால் அப்படத்தின் 2ம் பாகமாக உருவாகும் தலைவன் இருக்கிறான் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இந்தியன் படத்தில் இணைந்த கமல் ரஹ்மான் 19 வருடம் கழித்து தலைவன் இருக்கிறான் படத்தில் இணைகின்றனர்.இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் சந்தித்துப் பேசினர்.

அப்போது கமல் கூறியது: 1990களில் நான் இளையராஜா இசையில் தான் முற்றிலும் மூழ்கிப்போயிருந்தேன். அதனால் ஏ.ஆர்.ரஹ்மானை லேட்டாக அடையாளம் கண்டேன். ரஹ்மானிடம் பணியாற்றும்போது நம் வேலையை இன்னும் எளிதாக்கி விடுகிறார். ஒருவருடத்துக்கு முன்பு புதிய பாடல் ஒன்றுக்காக இருவரும் பணியாற்றினோம். அது அவ்வளவு அருமையாக அமைந்திருக்கிறது. எனக்கில்லாமல் வேறு கதாநாயகன் யாருக்காவது இந்த பாடல் கிடைத்திருந்தால் நான் பொறாமை அடைந்திருப்பேன்.

ஒரு நாள் இருவரும் பேசிக்கொண்டிருந்த போது குறிப்பிட்ட ஒரு வார்த்தையில் ஆர்வம் காட்டினோம். அந்த வார்த்தையைக் கொண்டு பாடல் எழுதும் படி என்னிடம் ரஹ்மான் கூறினார். அன்று இரவு முழுவதும் அமர்ந்து காலை 8.30 மணிக்கெல்லாம் பாடல் எழுதி முடித்தேன். அன்று மாலையே அப்பாடலை முடித்துவிட்டோம். விரைவில் அந்த பாடல் வெளியிட ஆவலாக இருக்கிறேன்.இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

More News >>