கொரோனா பாதித்த அதிமுக எம்.எல்.ஏ.விடம் முதல்வர் நலம் விசாரிப்பு..

கொரோனா பாதித்துள்ள அதிமுக எம்.எல்.ஏ.விடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உடல்நலம் விசாரித்தார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் வேகமாகப் பரவி வருகிறது. சென்னையில் மட்டுமே கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பழனிக்கு கொரோனா பாதித்தது. இதையடுத்து, அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 12ம் தேதி சேர்க்கப்பட்டார்.

இது பற்றி அறிந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவமனையில் உள்ள பழனியின் மகன்கள் செல்வம், வினோத் ஆகியோரிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார். மேலும், எம்.எல்.ஏ. பழனிக்கு தேவையான மருத்துவ வசதிகளைச் செய்து தருமாறு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பழனியின் உடல்நிலை தேறி வருகிறது. இந்நிலையில் இன்று(ஜூன்14) காலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சிகிச்சையில் உள்ள பழனியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தார். அப்போது தான் நலமாக உள்ளதாக அவரிடம் பழனி தெரிவித்தார்.

More News >>