தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தைத் தாண்டியது.. பலி 576 ஆக அதிகரிப்பு..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தைத் தாண்டியது. பலி எண்ணிக்கையும் 576 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பரவி வருகிறது. தமிழகம் முழுவதும் நேற்று(ஜூன்18) ஒரே நாளில் 2094 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 80 பேரும் அடக்கம். தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 50,193 பேராக அதிகரித்துள்ளது.இதில், நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 842 பேரையும் சேர்த்து 27,624 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ஐக்கிய அரபு நாட்டில் இருந்து வந்த 5 பேர், சவுதி 4 பேர், குவைத் 2 பேர், மலேசியா 2 பேர் மற்றும் மகாராஷ்டிரா 38 பேர், கர்நாடகா 7, கேரளா 5, ஒடிசா 6, டெல்லி 4, ராஜஸ்தான் 2, மேற்கு வங்கம், ஜார்கண்டில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று நேற்று கண்டறியப்பட்டது.சென்னையில் மட்டும் நேற்று 1276 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 35,556 ஆக அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டில் நேற்று 162 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்துப் பாதிப்பு எண்ணிக்கை 3271 ஆக உள்ளது. இதே போல், திருவள்ளூரில் நேற்று 90 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் மொத்தம் 2037பேருக்கும், காஞ்சிபுரத்தில் நேற்று 61 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அம்மாவட்டத்தில் 864 பேருக்கும் இது வரை கொரோனா பரவியிருக்கிறது. நெல்லை உள்பட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 500ஐ நெருங்கியுள்ளது. மற்ற மாவட்டங்களில் அதை விடக் குறைவானவர்களுக்கு நோய் பரவியிருக்கிறது. தமிழகத்தில் நேற்றுதான் அதிகபட்சமாக கொரோனா நோயாளிகள் 48 பேர் பலியாயினர். இதை அடுத்து, சாவு எண்ணிக்கை 576 ஆக உயர்ந்தது.

More News >>