எங்க அக்கா மாதிரி சிறந்த தலைவி உலகில் இல்லை - தமிழிசையை கிண்டல் செய்த பாஜக பிரமுகர்

திருப்பத்தூரில், பெரியார் சிலையை உடைத்த முத்துராமனை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நீக்கியதற்கு, எச்.ராஜாவின் தீவிர ஆதரவாளர் கல்யாண் ராமன் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

கடந்த 25 ஆண்டுகளாக திரிபுராவில் ஆட்சி நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில், தெற்கு திரிபுராவில் உள்ள பிலோனியா என்ற இடத்தில் மார்க்சிஸ்ட் ஆட்சி காலத்தில் வைக்கப்பட்ட லெனின் சிலை ஜேசிபி இயந்திரம் மூலம் நேற்று அகற்றப்பட்டது. லெனின் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு வலுத்தது.

அதனை தொடர்ந்து எச்.ராஜா, லெனின் சிலை தகர்க்கப்பட்டது போல பெரியார் சிலையும் தமிழகத்தில் உடைக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். இதற்கும் தமிழகமெங்கும் கண்டனங்கள் எழுந்தன. இதனையடுத்து சிலை உடைப்பில் ஈடுபட்ட திருப்பத்தூர் பிரமுகர் முத்துராமனை பாஜகவில் இருந்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நீக்கினார்.

இந்நிலையில் பாஜக பிரமுகரும், எச்.ராஜாவின் ஆதரவாளருமான கல்யாண் ராமன் முகநூலில் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக, "பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்..." என்ற தலைப்பில் கருத்து ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

அதில், “முத்துராமனை நீக்கியது கடைந்தெடுத்த முட்டாளத்தனம்னு நான் சொல்ல விரும்பினாலும், அப்படி சொன்னால் நானும் நீக்கப்படுவேன் என்பதால் அதை சொல்லாமல் தவிர்க்கிறேன்... பாஜகவில் பாஜகவினர் இருக்க வேண்டும், கட்சி வளர வேண்டும் என்றால், பாஜகவில் உள்ள காங்கிரசார் தான் முதலில் நீக்கப்பட வேண்டும்னும் சொல்ல தோணுது...

ஆனா அதை சொன்னாலும் பிரச்சனை என்பதால் அதையும் நான் சொல்லல... பேய் அரசாண்டால்... பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் அப்படின்னு பாரதி சொன்னதை சொல்லி காட்டனும்னு தோணுது... இந்த பாழாய் போன பயம் வந்து சொல்லாமல் தடுக்குது... கட்சி, பதவி என்பது பாருங்க எவ்ளோ பெரிய பயமுறுத்தும் ஆயுதமா இருக்கு...

எங்க அக்கா மாதிரி சிறந்த தலைவி உலகில் இல்லை என்ற இறுதியான, உறுதியான சொல்லை சொன்னால் தான் நான் தப்பிக்க முடியும் என்ற காரணத்தால், தென்னகத்து ஜான்சிராணியின் இந்த செயல் வரவேற்கத்தக்கது என கூறி, எங்க அக்காவுக்கு எனது சிரம் தாழ்த்திய வணக்கங்களையும், அவங்க நயினாவை நோக்கி, காங்கிரசும், காங்கிரசின் வழித்தோன்றல்களும் வாழ்கன்னும் கூவிக்கொண்டு விடைபெறுகிறேன்... நன்றி வணக்கம்...

(எங்க அக்கா பெரியார், பிரபாகரனின் பக்தை என்பது நிறைய பேருக்கு தெரியாது. அது பற்றி தனியே எனது அனுபவத்தை எழுதுகிறேன்)” என்று பதிவிட்டுள்ளார்.

More News >>