போலி கபசுரக் குடிநீர் விற்பவர் மீது குண்டர் சட்டம்.. முஸ்லிம் லீக் கோரிக்கை..

போலி கபசுரக் குடிநீர் விற்பவர்களைக் குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டுமென்று அரசுக்குத் தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது.தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் நாளுக்குநாள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. கபசுர குடிநீர் அருந்தினால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் எனச் சித்தா மருத்துவத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் கபசுரக் குடிநீரை அருந்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதையடுத்து தன்னார்வலர்கள், நிறுவனங்கள், பாரம்பரிய மருத்துவர்கள் ஆங்காங்கே கபசுர குடிநீரைப் பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகித்து வருகின்றனர். இதற்காக அவர்கள் நாட்டு மருந்துக் கடைகளுக்கு அலைந்து வருகின்றனர். இதைப் பயன்படுத்தி சிலர், போலி கபசுர குடிநீர் சூரணத்தைத் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.கபசுர குடிநீர் சூரணத்தைச் சிலர் முறையான அனுமதி பெறாமல் தயாரிக்கின்றனர். அதிக லாபத்திற்காக மருந்துக் கடைகளிலும் இந்த போலி கபசுர குடிநீரை விற்பனை செய்து வருகின்றனர். நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் சில பொருட்களை வாங்கி மிக்ஸியில் அரைத்து பாக்கெட் வடிவில் 50 கிராம் ரூ.100 வரை விற்பனை செய்கின்றனர்.மருந்துக் கடைகளுக்கு ரூ.60க்கு அளிப்பதால், அவர்களும் இது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கபசுர குடிநீர் என்பதை எல்லாம் பார்க்காமல் லாப நோக்கில் பொதுமக்களிடம் விற்பனை செய்கின்றனர். பவுடர் வடிவில் தயாரிக்கப்படும் இந்த கபசுர குடிநீர் சூரணம் தடை செய்யப்பட்ட பாலிதீன் கவர்களில் அடைத்து விற்பனை செய்து, அரசின் தடை உத்தரவையும் மீறி வருகின்றனர்.

கொரோனாவில் இருந்து எப்படியாவது பாதுகாத்துக் கொள்ள முடியாதா என மக்கள் அனைவரும் ஏங்கி, கபசுர குடிநீரைக் குடித்தால் பாதுகாத்துக் கொள்ள முடியும் எனும் நம்பிக்கையின் அடிப்படையில் மருந்துக் கடைகளில் விற்பனை செய்யப்படும் போலிகளை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதற்காகப் பதிலாக எதிர்மறையை உருவாக்கும் என மக்களிடம் அறியாத நிலை உள்ளது.ஆகவே மக்களின் நலன் மீது அக்கறையில்லாமல் கொரோனா எனும் கொடிய அரக்கனுடன் கூட்டணி வைத்துக் கொண்டு போலி கபசுர குடிநீர் தயாரிக்கும் நபர்களை அரசு கண்டறிந்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். அதுமட்டுமில்லாது, அங்கீகாரம் இல்லாத நிறுவனங்கள் தயாரிக்கும் கபசுரகுடிநீர் சூரணத்தை மருந்து நிறுவனங்கள் விற்பனை செய்வதைத் தடுக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் தனிக் குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு போலி கபசுர குடிநீர் சூரண விற்பனையை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு முஸ்தபா கூறியுள்ளார்.

More News >>