லடாக்கில் சீனா ஊடுருவவில்லை.. பிரதமர் மோடி விளக்கம்..

இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவவில்லை. இந்திய ராணுவ நிலைகளை யாரும் கைப்பற்றவில்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவப் படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் பதிலடியில் சீனதரப்பில் 43 பேர் பலியானதாகத் தகவல் வெளியானது. ஆனால், அது உறுதி செய்யப்படவே இல்லை. சீனப் படைகள் தொடர்ந்து இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் ஊடுருவியிருப்பதாகக் கூறப்படுகிறது.

லடாக் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இது பற்றி விவாதிப்பதற்காக அனைத்து கட்சி கூட்டத்தைப் பிரதமர் மோடி நேற்று (ஜூன்19) மாலை 5 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தினார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் தலைவருமான மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்பட முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:இந்திய எல்லைக்குள் அன்னியர் எவரும் ஊடுருவவில்லை. இந்திய எல்லைக்குள் இப்போது அன்னியர் எவரும் இல்லை. நமது ராணுவ நிலைகளை எவரும் கைப்பற்றவில்லை. லடாக்கில் நமது வீரர்கள் 20 பேர், வீரமரணம் அடைந்துள்ளனர். ஆனால், அவர்கள் நமது எல்லைகளைக் குறி வைத்தவர்களுக்குச் சிறந்த பாடத்தைக் கற்பித்துள்ளனர். நமது எல்லைகளைப் பாதுகாக்கவும், அன்னியர்களை விரட்டியடிப்பதற்கும் ராணுவம் சுதந்திரமாக பணியாற்றி வருகிறது. நமது நாட்டை அனைத்து வழிகளிலும் பாதுகாப்பதில் மிகவும் திறமை வாய்ந்ததாக ராணுவம் உள்ளது.

இந்தியா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒட்டுமொத்த மக்களுக்குக் கோபம் கொண்டுள்ளனர். இதை அனைவரும் வெளிப்படுத்தியுள்ளனர்.இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். கூட்டத்தில் சோனியா காந்தி பேசும் போது, சீன தாக்குதலில் 20 வீரர்களை இழந்ததற்கு உளவுத் துறை தோல்வி காரணமா? நமது எல்லைகளை மீட்க வேண்டும். சீனா ஏற்கனவே இருந்த பகுதிக்கு விரட்டப்பட வேண்டும்என்று கூறினார்.

More News >>