இலங்கை நல்ல நாடு இனவெறி அகல வேண்டும் - இலங்கை விவகாரம் குறித்து அஸ்வின்

கலவரத்தை விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்றும். இனவெறியை அகற்றி இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பௌத்த மதத்தினருக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதல் முற்றி இஸ்லாமியர்களின் கடைகள், வீடுகள், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதனால் மக்கள் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் 10 நாட்கள் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் கலவரத்தை ஒடுக்க சமூக வலைத்தளங்கள், இணைய சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.

இலங்கை விவகாரம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ள அஸ்வின், “இலங்கை நடப்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. இலங்கை மிகவும் நல்ல நாடு. அங்கு வாழும் மக்கள் எந்தவித தீய எண்ணம் இல்லாமல் வாழ்கிறார்கள். பிரிவினை பிரச்சனை காரணமாக அங்கு வருந்தத்தக்க நிகழ்வுகள் நடைபெறுகிறது.

வாழ்வோம், வாழ விடுவோம். வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வது முக்கியம். கலவரத்தை விரைவில் முடிவுக்கு வர வேண்டும். இனவெறியை அகற்றி இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டிக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

More News >>