தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 62 ஆயிரத்தை தாண்டியது.. பலி 794 ஆக அதிகரிப்பு..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 62 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கையும் 800ஐ நெருங்கியுள்ளது.நாட்டிலேயே மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது. கடந்த 2 வாரங்களாகச் சென்னையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பரவி வந்தது. சென்னையில் இருந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும் கொரோனா வேகமாகப் பரவியது. தற்போது மற்ற மாவட்டங்களுக்கும் சென்னையில் இருந்து சென்றவர்கள் மூலமாக கொரோனா பரவி வருகிறது.

தமிழகம் முழுவதும் நேற்று(ஜூன்22) ஒரே நாளில் 2710 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், வெளிமாநிலங்களிலிருந்து வந்த 58 பேரும் அடக்கம். டெல்லி 10, மகாராஷ்டிரா 9, கர்நாடகா 11, கேரளா 9, குஜராத் 4, ஆந்திரா 3, ராஜஸ்தான் 2, உ.பி, தெலங்கானாவில் இருந்து வந்த தலா ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 62,087 ஆக அதிகரித்துள்ளது. இதில், நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 1358 பேரையும் சேர்த்து 34,112 பேர் குணம் அடைந்துள்ளனர்.

சென்னையில் நேற்று 1487 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 42,752 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டில் நேற்று 126 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்துப் பாதிப்பு எண்ணிக்கை 3872 ஆக உள்ளது. இதே போல், திருவள்ளூரில் நேற்று 120 பேருக்குத் தொற்று உறுதியான நிலையில் மொத்தம் 2645 பேருக்கும், காஞ்சிபுரத்தில் நேற்று 56 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அம்மாவட்டத்தில் 1215 பேருக்கும் கொரோனா பரவியிருக்கிறது.

தற்போது கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு 800ஐ தாண்டி விட்டது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால், மக்கள் அதிகமான பீதியில் உள்ளனர். இதனால், தங்கள் சொந்த ஊர்களுக்கு கார்களில் படையெடுத்துச் சென்றனர்.கொரோனா பாதித்தவர்களும் தங்கள் மாவட்டங்களுக்குச் சென்றதில் கொரோனா அந்த மாவட்டங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் நேற்று கொரோனா நோயாளிகள் 37 பேர் பலியாயினர். இதையும் சேர்த்தால், சாவு எண்ணிக்கை 794 ஆக உயர்ந்தது.

More News >>