இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 418 பேர் பலி..

இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 4 லட்சத்து 73,205 ஆக அதிகரித்துள்ளது. அதே போல், கொரோனா நோயாளிகள் 418 பேர் நேற்று உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 14,894 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

நாடு முழுவதும் தினமும் 14, 15 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 16,922 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 4 லட்சத்து 73,205 ஆக அதிகரித்துள்ளது. அதே போல், கொரோனா நோயாளிகள் 418 பேர் நேற்று உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 14,894 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில்தான் ஒரு லட்சத்து 42,900 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. அம்மாநிலத்தில் மட்டுமே 6739 பேர் பலியாகியுள்ளனர். 2வது இடத்தில் டெல்லியில் 70,390 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. 2365 பேர் பலியாகியுள்ளனர், அடுத்து தமிழகத்தில் 67.468 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், 890 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் இது வரை 75 லட்சத்து 60,782 மாதிரிகள், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதே போல், இந்தியாவில் குணம் அடைந்தோர் விகிதமும் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. நோய் பாதித்தவர்களில் 4.76 சதவீதம் பேருக்குத்தான் சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் உதவி தேவைப்பட்டுள்ளது.

More News >>