இந்தியாவில் ஒரே நாளில் 17,296 பேருக்கு கொரோனா.. 5 லட்சத்தை நெருங்குகிறது..

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 17,296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரை நோய் பாதித்தவர் எண்ணிக்கை 4 லட்சத்து 90,401 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் உலகில் பல நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவில் 90 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமல்படுத்தியும், கொரோனா தொற்று பரவல் கட்டுப்படவில்லை. நாடு முழுவதும் தினமும் சராசரியாக 15 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

நாட்டில் நேற்று ஒரே நாளில் புதிதாக 17,296 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 4 லட்சத்து 90,401 ஆக அதிகரித்துள்ளது. அதே போல், கொரோனா நோயாளிகள் 407 பேர் நேற்று உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 15,301 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில்தான் ஒரு லட்சத்து 47,741 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. அம்மாநிலத்தில் மட்டுமே 6931 பேர் பலியாகியுள்ளனர். 2வது இடத்தில் டெல்லியில் 73,780 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. 2429 பேர் பலியாகியுள்ளனர், அடுத்து தமிழகத்தில் 70,977 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், 911 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் நேற்று 2 லட்சத்து 15,446 மாதிரிகள், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இது வரை 77 லட்சத்து 76,228 மாதிரிகள், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதே போல், இந்தியாவில் குணம் அடைந்தோர் விகிதமும் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

More News >>