தமிழகத்தில் 75 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு..

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. பலி எண்ணிக்கையும் 957 ஆக உயர்ந்தது.தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு 90 நாட்களைத் தாண்டி விட்டது. ஆனாலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா அதிகமானோருக்குப் பரவி வருகிறது.

அதிலும் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு நடைபெறுவதால், தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. அதில், சென்னையில் மட்டுமே 1500க்கும் மேற்பட்டோருக்குத் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. மேலும், இப்போது மற்ற மாவட்டங்களுக்கும் கொரோனா பரவத் தொடங்கியிருக்கிறது.

தமிழகம் முழுவதும் நேற்று(ஜூன்26) ஒரே நாளில் 3642 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 119 பேரும் அடக்கம்.தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 74,622 ஆக அதிகரித்துள்ளது. இதில், நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 1358 பேரையும் சேர்த்து 41357 பேர் குணம் அடைந்துள்ளனர்.

சென்னையில் மட்டுமே நேற்று 1956 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை நோய் பாதித்தவர் எண்ணிக்கை 46,690 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டில் நேற்று 232 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்துப் பாதிப்பு எண்ணிக்கை 4657 ஆக உள்ளது. இதே போல், திருவள்ளூரில் நேற்று 177 பேருக்குத் தொற்று உறுதியான நிலையில் மொத்தம் 3277 பேருக்கும், காஞ்சிபுரத்தில் நேற்று 90 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அம்மாவட்டத்தில் 1580 பேருக்கும் கொரோனா பரவியிருக்கிறது.

மேலும், மதுரையில் 190 பேர், ராமநாதபுரத்தில் 68 பேருக்கும், சேலத்தில் 86 பேருக்கும், திருச்சியில் 32 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் நேற்று 20, 25 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது வரை 18 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டியிருக்கிறது.இந்நிலையில், தமிழகத்தில் நேற்று கொரோனா நோயாளிகள் 46 பேர் பலியாயினர். இதையும் சேர்த்தால், சாவு எண்ணிக்கை 957 ஆக உயர்ந்தது.

More News >>