முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு கொரோனா.. சிகிச்சையில் 8 எம்.எல்.ஏ.க்கள்..

முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் சில எம்.எல்.ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் இது வரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 11,151 ஆக உள்ளது. இந்நிலையில், திமுக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் கொரோனா பாதிக்கப்பட்டது.

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதே போல், திமுகவின் செய்யூர் எம்.எல்.ஏ அரசு, செஞ்சி எம்.எல்.ஏ மஸ்தான், ராஜபாளையம் எம்.எல்.ஏ தங்கபாண்டியன் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்றனர். இதே போல், அதிமுகவில் அமைச்சர் கே.பி.அன்பழகன், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ பழனி, உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ குமரகுரு, பரமக்குடி எம்.எல்.ஏ சதன் பிரபாகர், கோவை தெற்கு எம்.எல்.ஏ. அம்மன் அர்ச்சுனன் ஆகியோருக்கும் சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதிக்கும் கொரோனா தொற்று பாதித்துள்ளது. உடல்நலம் இல்லாமல் இருந்த அவருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது உறுதியாகியிருக்கிறது. இதையடுத்து, அவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

More News >>