இந்திய-சீன எல்லையில் விமானப்படை விமானங்கள் தீவிர கண்காணிப்பு..

லடாக் எல்லையில் இந்திய விமானப்படை விமானங்கள் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டன.காஷ்மீர் லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் ஜூன் 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கர்னல் சந்தோஷ்பாபு, தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதன்பின், இரு நாட்டு ராணுவப் படைகளும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே குவிக்கப்பட்டுள்ளன. இதனால், எல்லையில் பதற்றம் நீடித்து வந்தது. இதற்கிடையே, இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் ஜூன் 22ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுமுக உடன்பாடு எட்டப்படா விட்டாலும், எல்லையில் மோதலை தவிர்ப்பது என்றும், இரு நாட்டுப் படைகளும் பிரச்சனைக்குரிய கல்வான் பகுதியில் இருந்து விலகிச் செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஆனால், சீனா அந்த பகுதிக்குள் மீண்டும் நுழைந்து கூடாரங்களை அமைத்து சில பணிகளைத் தொடங்கியிருப்பது, செயற்கைக்கோள் படங்களில் தெரிய வந்தது. சீனாவின் இந்த அடாவடிகளைத் தொடர்ந்து, பிரதமர் மோடி ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார். சீனா கம்பெனிகளின் முதலீட்டில் செயல்படும் டிக்டாக், ஷேர் இட் உள்பட 59 மொபைல் ஆப்ஸ்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதனால், சீன நிறுவனங்களுக்குப் பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த 2 நாட்களுக்கு முன்பு, சீனப் படைகள் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குப் பின்னோக்கி சென்றன. எனினும், கல்வான் பகுதியில் ஆயுதங்களுடன் சீனப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், லடாக் எல்லையில் இந்திய ராணுவமும் தொடர்ந்து கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. நேற்றிரவு கிழக்கு லடாக் பகுதியில் நமது விமானப்படை விமானங்கள், தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டன. போர் விமானங்களான மிக்-29, சுகோய் 30 எம்.கே.ஐ. போன்றவை இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இந்தியா விமானப் படை இரவு நேரத்திலும் சிறப்பாகச் செயல்படும் வகையில் திறன் பெற்றுள்ளதாக விமானப்படை கமாண்டர் சர்மா தெரிவித்தார்.

More News >>