சென்னை கிண்டியில் 750 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு மருத்துவமனை..

சென்னை கிண்டியில் உள்ள தேசிய முதியவர் நல மருத்துவமனை கட்டிடம், கொரோனா சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.சென்னை கிண்டியில் உள்ள தேசிய முதியவர் நல மருத்துவமனை கட்டிடம், கொரோனா நோய்க்குச் சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் 750 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. 70 படுக்கைகள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 300 படுக்கைகள், வென்டிலேட்டர் பொருத்தும் வசதியுடன் 200 படுக்கைகள் மற்றும் 250 சாதாரண படுக்கைகள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. அதிநவீன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு மருத்துவமனையைத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் தொடங்கி வைக்கிறார்.

இது குறித்து, கொரோனா சிகிச்சை ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டர் ஆனந்தகுமார் கூறுகையில், கிண்டி கொரோனா சிறப்பு மருத்துவமனையில், கொரோனா தொற்று பாதித்து, மூச்சுத்திணறலால் வருகிறவர்களுக்குச் சிகிச்சை அளிக்க 25 வென்டிலேட்டர்கள் தயாராக உள்ளன. நோயாளிகளின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில், ஒரே நேரத்தில் 20 பேர் அமர்ந்து டி.வி. பார்க்கும் வசதியும், 30 பேர் புத்தகம் படிக்கும் நூலக வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. வீடியோ காட்சிகள் மூலம் யோகா பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், வைபை வசதி உள்ளதால், நோயாளிகள் தங்கள் குடும்பத்தினரிடம் வாட்ஸ் அப் மூலம் பேச முடியும். நோயாளிகளுக்குத் தேவையான சி.டி. ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட அனைத்து பரிசோதனை வசதிகளும் ஒரே இடத்தில் அமைந்து உள்ளது. இந்த சிறப்பு மருத்துவமனை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை நிர்வாகத்தின் கீழ் செயல்படும் என்றார்.

More News >>