திமுகவுக்கு எதிர்காலம் இல்லை.. அமைச்சர் வேலுமணி காட்டம்..

தமிழக அரசியலில் தி.மு.க.விற்கு எதிர்காலம் இல்லை என்பது தெளிவாகப் புரிந்து விட்டதால், அரசின் மீது பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை ஆதாரமில்லாமல், வெளியிட்டு மு.க.ஸ்டாலின் உச்சக்கட்ட விரக்தியை வெளிப்படுத்துகிறார் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:உண்ணவும் நினையாது, உறங்கவும் முனையாது, கொரோனாவிலிருந்து தமிழகத்து மக்களைப் பூரணமாய் மீட்கும் வகையில் தொடர்ந்து இரவு, பகல் பாராது போராடி வருகிறார் எளிமை சாமானியர் எடப்பாடி பழனிசாமி.

கொரோனா கொள்ளை நோய்க்கு எதிராக பெரும் போராட்டத்தை நிகழ்த்திவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நன்மதிப்பைப் பொறுக்க முடியாமல், வகையற்ற வாதங்களை வார்த்தைகளாக்கி அறிக்கைகளை நித்தம் ஒன்றாய் விடுத்து வருகிறார் மு.க.ஸ்டாலின்.மத்திய அரசால், நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் சீர்மிகு நகரங்கள் முன்னோடி திட்டத்தின் கீழ் அதிக அளவில் சீர்மிகு நகரங்கள் தேர்வு செய்யப்பட்டதில், தமிழகம் முதல் மாநிலமாகத் திகழ்கிறது. இதனைத் தமிழகத்திற்குப் பெற்றுத் தந்தவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தான்.

கடந்த 9 ஆண்டுகளில் இந்திய அளவில் உள்ளாட்சித்துறை அதிகமான சாதனைகளைப் படைத்துள்ளது. இதே காலகட்டத்தில் உள்ளாட்சித்துறையின் சார்பாக 123 தேசிய விருதுகளை வென்று தாய் தமிழகத்திற்கு உள்ளாட்சித்துறை தலைப்பாகை சூட்டியிருக்கிறது.உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவிலிருந்து தமிழக மக்களைக் காத்திட அல்லும்பகலும் அயராது உழைத்து வரும் எங்கள் எடப்பாடி பழனிசாமியின் நல்லாட்சி தரத்தை அனைத்து அமைப்புகளும் பாராட்டி மகிழ்வதைக் காணப் பொறுக்காது, அறிக்கைகளை விட்டு மு.க.ஸ்டாலின் காட்டுகிற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் நாங்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டோம். மு.க.ஸ்டாலின் சுமத்தும் எந்த குற்றச்சாட்டுகளையும் நான் எதிர்கொள்ளத் தயார்.

தமிழகத்தில் சிறப்பான திட்டங்களை அனைத்து துறைகளிலும் செயல்படுத்துவதால், மக்கள் மன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்குப் பெருகி வரும் ஆதரவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், குறிப்பாக விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. பெற்ற இமாலய வெற்றிக்குப்பிறகு, இனி தமிழ்நாட்டு அரசியலில் தி.மு.க.விற்கு எதிர்காலம் இல்லை என்பது தெளிவாகப் புரிந்து விட்டதால், அரசின் மீது பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை ஆதாரமில்லாமல், வெளியிட்டு மு.க.ஸ்டாலின் உச்சக்கட்ட விரக்தியை வெளிப்படுத்துகிறார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

More News >>