ஹீரோ, வில்லன் எதற்கும் தயார்.. ஆர்.கே நகர் இனிகோ பிரபாகர்..

நடிக்க வந்த ஆரம்பக் காலத்தில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பின் தனது தனித்துவமான நடிப்புத் திறமையால் பல படங்களில் முதன்மை மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பலரது பாராட்டைப் பெற்றவர் நடிகர் இனிகோ பிரபாகர்.சென்னை 28, சென்னை 28 II, பூ, சுந்தர பாண்டியன், ஆர்.கே நகர் என இவர் நடித்த அனைத்து படங்களிலும் இவரது நடிப்பும், கதாபாத்திரத்தின் தன்மையைக் கையாண்ட விதமும் பலரையும் கவர்ந்தது. அழகர் சாமியின் குதிரை, ரம்மி, பிச்சுவா கத்தி, வீரய்யன் படங்களில் நாயகனாக நடித்திருந்தார்.

நடிகர் இனிகோ பிரபாகர் கூறியதாவது: நான் என்றும் என் கதாபாத்திரத்தின் தன்மை மாறாமல் நடிப்பது ரசிகர்களுக்குப் பிடித்திருந்தது. அதிலும் ஆர்.கே நகர் படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும் அந்த படத்தில் கதாநாயகனுக்கு நிகரான கதாபாத்திரம் என்பதால் எனது நடிப்பு யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் சரவண ராஜன் விரும்பினார், நானும் அதையே செய்தேன். இயக்குனர் வெங்கட் பிரபு ஆர்.கே நகர் படத்தில் என நடிப்பைப் பலரும் பாராட்டியதாகக் கூறியது என்னை மேலும் உத்வேகப்படுத்தியது.

தற்போது இரண்டு புதிய படங்களில் கதாநாயகனாக நடிக்கிறேன். இந்த இரண்டு படங்களின் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 'ஆர்.கே நகர் படத்தில் கிடைத்தது போன்ற சவாலான வில்லன் கதாபாத்திரம் கிடைத்தால் மீண்டும் நடிப்பீர்களா?' என கேட்கிறார்கள் கண்டிப்பாகச் செய்வேன். சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது. அதை ஏற்கவும் தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு இனிகோ பிரபாகர் தெரிவித்தார்.

More News >>