இந்திய ராணுவ வீரர்களுக்கு 89 மொபைல் ஆப்ஸ் பயன்படுத்த தடை..

இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் மொபைல் போன்களில் இருந்து சீன ஆப்ஸ்கள் உள்பட 89 ஆப்ஸ்களை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.காஷ்மீர் லடாக்கின் கல்வான் பகுதியில் எல்லைக்கோடு அருகே சீன ராணுவத்தினர் ஜூன் 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கர்னல் சந்தோஷ்பாபு, தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதன்பின், இரு நாட்டு ராணுவப் படைகளும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே குவிக்கப்பட்டன. இதனால், எல்லையில் பதற்றம் நீடித்து வந்தது.

இதற்கிடையே, இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் ஜூன் 22ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுமுக உடன்பாடு எட்டப்படா விட்டாலும், எல்லையில் மோதலை தவிர்ப்பது என்றும், இரு நாட்டுப் படைகளும் பிரச்சனைக்குரிய கல்வான் பகுதியில் இருந்து விலகிச் செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.ஆனால், சீனா அந்த பகுதிக்குள் மீண்டும் நுழைந்து கூடாரங்களை அமைத்து சில பணிகளைத் தொடங்கியது. சீனாவின் இந்த அடாவடிகளைத் தொடர்ந்து, பிரதமர் மோடி ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார். சீனா கம்பெனிகளின் முதலீட்டில் செயல்படும் டிக்டாக், ஷேர் இட் உள்பட 59 மொபைல் ஆப்ஸ்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இதனால், சீனக் கம்பெனிகளுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது.இந்நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் மொபைல் போன்களில் இருந்து 89 மொபைல் ஆப்ஸ்களை நீக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே மத்திய அரசு தடை செய்துள்ள 59 சீன மொபைல் ஆப்ஸ்களும் அதில் அடக்கம். நாட்டின் பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது, டிக்டாக், பேஸ்புக், வி-சேட் உள்பட 89 ஆப்ஸ்களையும் ராணுவ வீரர்கள் தங்கள் செல்போனில் இருந்து நீக்கியுள்ளனர்.

More News >>